பாட்டாளி

statue

பாட்டாளிகளின் மேன்மையை “பாட்டாளி” என்ற தலைப்பில் பாட்டுத்தலைவன் சாரணபாஸ்கரன் பாட்டாய் வடித்த சொற்காவியம் இது :
 
காட்டை யழித்திடுவோம் – அதிற்பல
காட்சியுண் டாக்கிடுவோம் !
நாட்டைத் திருத்திடுவோம் – பொதுவினில்
நன்மைகள் செய்திடுவோம் !

மலையைச் சிதைத்திடுவோம் – அழகிய
மாளிகை யாக்கிடுவோம் !
சிலையைச் செதுக்கிடுவோம் – அதிலெழில்
சிந்திடச் செய்திடுவோம் !

குளத்தையும் வெட்டிடுவோம் – உயரிய
கோபுரம் கட்டிடுவோம் !
நிலத்தை உழுதிடுவோம் – உணவுக்கு
நெற்பயிர் செய்திடுவோம் !

மூச்சை யடக்கிடுவோம் – கடலினுள்
மூழ்கிவெண் முத்தெடுப்போம் !
கூச்சம் சிறிதுமென்றி – கையகலக்
கோவணத் தொடுநிற்போம் !

அஞ்சிப் பணியமாட்டோம் – எவர்க்கும்
அடிமையாய் வாழமாட்டோம் !
பஞ்சையர் என்றிகழ்ந்தால் – அவர்களின்
பல்லை யிதிர்த்திடுவோம் !

- கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன்
(1945 – “சாபம்” கவிதைத் தொகுப்பிலிருந்து)

அன்றும் இன்றும் !

Independance

சுதந்திரச் சூரியன் தோன்றிவிட்டால் – மக்கள்
   தொல்லை யகன்றிடும் என்றுரைத்தோம்
சுதந்திரம் வந்தது கண்டுகொண்டோம் – மக்கள்
   தொல்லை யகன்றிடக் காணவில்லை !

ஆளும் உரிமை யடைந்துவிட்டால் – மக்கள்
   அவலம் ஒழிந்திடும் என்றுரைத்தோம்
ஆளும் உரிமை யடைந்தவுடன் – நாமே
   ஆதிக்கம் செய்யத் துணிந்துவிட்டோம் !

மாற்றான் பிடிப்பை அறுத்துவிட்டால் – இங்கு
   மக்களின் ஆட்சி மலருமென்றோம்
மாற்றான் பிடிப்பு அகன்றபின்னே – ஏழை
   மக்களை நாமே மறந்துவிட்டோம் !

மக்கள் சுதந்திரம் வேண்டுமென்றோம் – சுய
   மானத்தைப் பேணிடச் சொல்லித்தந்தோம்
மக்கள் நலனை மறந்துவிட்டே – சொந்த
   மதிப்பை வளர்க்க முனைந்துவிட்டோம் !

தாயின் தளையைத் தகர்த்தெறிந்தால் – நம்மைத்
   தாக்கும் வறுமை ஒழியுமென்றோம்
சேயின் நலத்தை அடகுவைத்தே – பிற
   தேசங்கள் நன்மையைப் பேசுகின்றோம் !

கொள்ளை கொள்ளையென கூச்சலிட்டே – மக்கள்
   கொட்டிய குருதியில் நீச்சலிட்டோம்
வெள்ளையர்  ஆட்சி விலகியதும் – அந்த
   வெற்றி மயக்கினில் வீழ்ந்துவிட்டோம் !

- கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன்
(1953 – “நாடும் நாமும்” தொகுப்பிலிருந்து)

சுதந்திரமே வாழ்க !

India

ஏவலராய் ஏதுமறி யாதவராய்க்
   கோழையராய் இரந்துண் போராய்ச்
சேவகராய்ச் சிரம்பணியும் அடிமையராய்ச்
   செயலிழந்த சிலைபோன் றோராய்க்
கேவலமாய் வாழ்ந்தஎமை யாவருடன்
   சமமாக்கிக் கீர்த்தி மிக்கக்
காவலராய் ஆக்குவித்த சுதந்திரமே
   வாழியநீ கடைசி மட்டும் !

பேச்சுரிமை எழுத்துரிமை செயலுரிமை
   அன்னியர்கள் பிடியில் சிக்கி
மூச்சுவிடும் உரிமைக்கும் மற்றவரை
   யாசிக்கும் முறையில் தாழ்ந்து
ஏச்சடைந்தும் வலுவிழந்து எவரிடத்தும்
   தலைதாழ்ந்தே இழிந்த எம்மைக்
கூச்சமற்றுத் தலைநிமிர்ந்து உலவவைத்த
   சுதந்திரமே குன்றா தோங்க !

இனஉரிமை மொழியுரிமை மதஉரிமை
   அனைத்தையுமே எதிர்த்தொ ழித்துப்
பிணஉரிமை பெற்றிடவும் அன்னியரை
   எதிர்பார்த்துப் பின்ன டைந்து
கனவினிலும் நல்வாழ்வு காணுகின்ற
   உரிமையற்ற கடைய ராக்கித்
தினம்வருத்தும் அடிமையினை உடைத்தெறிந்த
   சுதந்திரமே செழித்து வாழி !

- கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன்
(1949 – “நாடும் நாமும்” தொகுப்பிலிருந்து)

விதியா? சதியா?

Farmer

உள்ளம் துடிக்குது சோதரர்காள் – என்றன்
   உதிரம் கொதிக்குது சோதரர்காள்
கள்ளமில் லாமலே சொல்லுகின்றேன் – உங்கள்
   கருத்தினைச் சற்றே திருப்பிடுவீர் !

உண்ணும் உணவை யுண்டாக்கிடுவோன் – இந்த
   உலகின் நலனுக் குழைத்திடுவோன்
பண்ணும் தொழிலின் பலன்களெல்லாம் – அவன்
   பஞ்சத்தைப் போக்கிடா விந்தையென்ன ?

முப்போகம் விளையும் நாட்டினிலே – பஞ்சம்
   முற்றுகை இட்டது எப்படியோ ?
எப்போதும் எம்மவர் வீட்டினிலே – பசி
   ஏகா திருப்பதெக் காரணமோ ?

வாழ்வை வளம்பெறச் செய்யுகிறோம் – நாட்டின்
   வறுமை யுடன்சம ராடுகிறோம் !
தாழ்வுற்றே இன்னமும் வாடுகிறோம் – இந்தச்
   சதியினை விதியென நம்புவதா ?

தேடித் திரட்டுவோர் எந்தனினம் – அதைத்
   தேட்டையிடுவோர் உலுத்த ரினம் !
வாடித் துடிப்போர் எழுந்துவிட்டால் – இன்று
   வஞ்சித்து வாழ்பவர் வீழ்ந்திடுவார் !

- கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன்
1946 (இதயக் குமறல் தொகுப்பிலிருந்து)

திருமறையின் திறப்பு

surathul-fathiha

“சூரத்துல் பாத்திஹா” எனப்படும் தித்திக்கும் திருமறையின் திறப்பு வசனத்திற்கு இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர், கவியரசு கண்ணதாசன்  உட்பட எத்தனையோ கவிஞர்கள் அவரவர் பாணியில், கருத்து மாறாத அளவில். கவிதை வடிவம் அளித்துள்ளார்கள்.

கவிஞர் சாரணபாஸ்கரன் அவர்களின் கன்னித்தமிழாக்கம் இது :

பேரருளும் பேரன்பும் மிக்க அல்லாஹ்
…..பெருமை மிகும் பெயரதனால் துவக்கம் செய்வோம்
பூரணமாம் புகழினுக்கே உரிமை யாளன்
…..படைப்பினங்கள் அத்தனையும் படைத்துக் காப்போன்
பேரருளும் பேரன்பும் மிக்க நாயன்
…..பார்முடிவின் தீர்ப்புநாள் அதிப னாகும்
பேரரசே! உன்னையே வணங்கி உன்றன்
…..பேரருளை வேண்டி நின்றோம் நின்னருள் பெரற்றோரின்
நேர்வழியில் செலுத்திடுக! நீமுனிந்தோர்
நெறிபிறழ்ந்தோர் செல்லும்வழி தன்னிலன்றே.

- அப்துல் கையூம்

காலக் கோவை – chronicle

சாரணபாஸ்கரன்

1923 – ஏப்ரல் மாதம் 26-ல் தஞ்சாவூர் ஜில்லா கூத்தாநல்லூரில் பிறந்தார்.

1936 – இவரது  “ஜினானா ஜெயந்தி கீதம்” என்ற முதல் படைப்பு அச்சுப் பிரசுரமாக வெளிவந்தது.

1937 – டி.எம்.எம். அஹ்மத் எனும் இயற்பெயர் கொண்ட இவருக்கு “சாரணபாஸ்கரன்” என்ற புனைப்பெயரை ந.மு.வேங்கடசாமி நாட்டார் வழங்கினார்.

1945 - காரைக்காலிருந்து வெளிவந்த “பால்யன்” வாரப் பத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றினார்.

1946 – இவரது முதல் கவிதைத் தொகுப்பு “மணியோசை” என்ற பெயரில் வெளிவந்தது.

1947 – முதல் 1951 வரை – ‘சாபம்’, சங்க நாதம்’, கவிதை தொகுப்புகள் வெளிவந்தது.

(மலாயா) பினாங்கில் ‘தேசநேசன்’ தினசரி ஆசிரியராக பணியாற்றினார்.

1949 –  ‘களஞ்சியம்’ தினசரி (மலேயா) வார இதழ் ஆசிரியராக பணியாற்றினார்.

1950 –  ‘முஸ்லிம் முரசு’ பத்திரிக்கை நடத்திய சிறுகதைபோட்டியில் முதற் பரிசு பெற்றார்.

1951 –  இதயக் குமுறல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.

1956 –  ‘யூசுப் – ஜுலைகா’ எனும் புகழ் பெற்ற காப்பியத்தை எழுதி முடித்தார்.

திருச்சி வானொலி நிலையத்தார் லெ,ப.கரு. ராமநாதன் அவர்கள் தலைமையில் கூட்டிய கவியரங்கில் “வாழ்க்கை வளமுற – உணர்வு” என்ற தலைப்பில் கவிதை பாடினார்.

1957 –  திருச்சியிலிருந்து வெளிவந்த ‘சன்மார்க்க சங்கு’ மாதமிருமுறை பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றினார்.

1959 – ‘மணிச்சரம்’ கவிதை நூல் வெளியானது

1960 – ஜனவரி 14, பொங்கலை முன்னிட்டு திருச்சி வானொலி நிலையம் ஏற்பாடு செய்த கவியரங்கில் “நாடு நகரம்” என்ற தலைப்பில் கவிதை பாடினார்.

ஏப்ரல் 9, காரைக்குடி கம்பன் விழாவில் பேராசிரியர் அ. சீனிவாச ராகவனார் தலைமையில் “கம்பனில் காணும் சமயக் கருத்துக்கள்” என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் “கம்பன் கண்ட இஸ்லாம்” என்ற கவிதையைப் பாடி பாராட்டினைப் பெற்றார்.

1961 – ‘நாடும் நாமும்’ கவிதை நூல் வெளிவந்தது

1963 – ஜனவரி 13, நம் நாட்டின் மீது சீனா துராக்கிரமிப்பு செய்ததை ஒட்டி ‘வீறு கொண்ட பாரதம்’ பற்றி சுவாமி சித்பவானந்தர் தலைமையில் திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பிய கவியரங்கில் “தியாகம்” என்ற தலைப்பில் பாடினார்.

1968 – ஜனவரி 8, சென்னையில் கூடிய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி நடைபெற்ற கவியரங்கில் “வணிகன்” என்ற தலைப்பில் கவிதை பாடினார்

ஜனவரி 14, அன்றைய ஊராட்சித்துறை அமைச்சர் பாவலர் முத்துச்சாமி தலைமையில் நடந்த கவியரங்கம், திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பியது. “பால்” என்ற தலைப்பில் கவிஞர் பாடினார்.

1969 – சென்னையில் நடந்த தமிழ்நாடு முஸ்லீம் லீக் மாநாட்டின் உபதலைவராக இருந்தார்.

1971 – ஏப்ரல் 16, திருச்சி வானொலி நிலையம், நாடக விழாவை முன்னிட்டு “பிரிவை மாற்றிய பிரிவு” எனும் அவருடைய நாடகத்தை ஒலிபரப்பியது. அதில் ஈராக்கிய மன்னர் ஹாரூன் முதலான ஏழுபேர் நாடக பாத்திரங்கள்.

அக்டோபர் 13 “வரம்பு கடந்த வாழ்வில் – அன்பு” என்ற தலைப்பில் அவரது இலக்கிய சொற்பொழிவை திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பியது.
 
1972 –  திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நடைபெற்ற முதல் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் இவரது தமிழ்ச் சேவையினை பாராட்டி புகாழாரம் சூட்டப்பட்டது. “வாழ்வியல்” என்ற தலைப்பில் கவிதை படித்தார்.

1977 – அவருடைய மொத்த கவிதைகளையும் உள்ளடக்கியத் தொகுப்பாக “சாரணபாஸ்கரனாரின் கவிதைகள்” வெளிவந்தது.

1986 – நவம்பர் 25-ல் கவிஞர் திலகம் மறைந்தார்,

ரோஜாவும் வண்ணத்துப்பூச்சியும்

e0aeb5e0aea3e0af8de0aea3e0aea4e0af8de0aea4e0af81e0aeaae0af8de0aeaae0af82e0ae9ae0af8de0ae9ae0aebf

ஒரு பழைய பாரசீகப் பாடல் இது:

அந்த புதிய ரோஜா
ஆழ்ந்த துயரத்தில் கிடந்தது.
அதன் கண்ணீர்த் துளிகள்
மண்ணில் சொட்டிக் கொண்டிருந்தன.
பறந்து வந்த
வண்ணத்துப்பூச்சி கேட்டது,

“ரோஜாவே…
ஏன் அழுகிறாய்?
உன்னைப் புகழ்ந்து
அந்த கவிஞன்
பாடவில்லை என்பதனாலா..?”

ரோஜா சொன்னது,
“அதனாலல்ல;
அவனுடைய கவிதைகளின்
ஒரு வார்த்தையாக இல்லாமல்
போனேனே என்பதனால்.. ..”

அந்த கவிஞர் வேறு யாருமல்ல; கவிஞர் சாரண பாஸ்கரனாரே தான்!

ஏவி.எம்.நஸீமுத்தீன்
துபாய்
15.01.1977

(ஜனவரி 27,19977-ல் தென்றல் மன்றம் பதிப்பித்த கவிஞர் திலகம் ‘சாரண பாஸ்கரனாரின் கவிதைகள்’ என்ற நூலுக்கு வழங்கப்பட்ட அணிந்துரை)

இன்னொரு சுதந்திரம் வேண்டும் !

- அப்துல் கையூம்
(நன்றி: திண்ணை ஏப்ரல் 2, 2009)

ஏறக்குறைய எல்லாக் கவிஞர்களும் ‘சுதந்திரம்’ பற்றி பாடி விட்டார்கள். பாடிய கவிஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் (கி.மு – கி.பி. என்று சொல்வதைப்போல). 

இந்தியச் சுதந்திரத்திற்கு முன் சுதந்திரம் வேண்டும் என்று பாடியவர்கள்  முதல் வகை. சுதந்திரம் கிடைத்த பின்பும் சுதந்திரம் வேண்டும் என்று பாடியவர்கள் இரண்டாவது வகை.

“அவன் சுதந்திரம் என்னும்
பட்டு வேட்டியின்
கனவு கண்டபோது – அவன்
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது”

என்கிறார் கவிஞர் மு.மேத்தா. சுதந்திரம் வந்தும் சுபீட்சம் இல்லை என்ற கருத்துதான் பரவலாக மேலோங்கி இருக்கின்றது. இப்படி ஆகுமென்று தெரிந்தால் பேசாமல்  சுதந்திரம் வாங்காமலேயே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் கூட சிலருக்கு வந்ததுண்டு. “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?”என்று பாரதி பாடிய பைந்தமிழ் வரிகள் இன்றைய சூழ்நிலைக்கும் கூட பொருத்தமாக இருக்கிறது.

ஆனால் கண்ணதாசனின் கருத்தோட்டம் முற்றிலும் வேறு கோணத்தில் இருந்தது. “சுதந்திரத்தைக் குற்றம் கூறி என்ன பயன்? பிரச்சினையே நம்மிடத்தில்தான்” என்பது அவரது வாதம்.

“வீடெங்கும் திண்ணை கட்டி
வெறும்பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சுதந்திரம் என்ன செய்யும்?”

என்ற திரைப்படப் பாடல் மூலம் வீணர்களைச் சாடுகிறார் கவியரசர். சுதந்திரம் கிடைத்தும் அதனை ஒழுங்காக பயன்படுத்த தெரியாதது நம் குற்றம்தான் என்கிறார்.

புதுக்கவிதைக்கு வித்திட்ட காலங்களில் கவிக்கோ அப்துல் ரகுமானால் கண்டெடுக்கப்பட்ட

“இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை”

என்ற வாக்கியம் எல்லோருக்கும் நினைவிருக்கும். புதுக்கவிதையின் எழுச்சியின்போது இந்த இரண்டு வரிக்கவிதைதான் எடுத்துக்காட்டாக எல்லோராலும் கையாளப்பட்டது.

“பகலில் ‘சுதந்திரம்’ வாங்கியிருந்தால் மட்டுமென்ன பாலும், தேனுமா வடியப் போகிறது?” என்று யாராவது திருப்பி கேட்கக் கூடும்.

சுதந்திரம் கிடைத்தும் நமக்கு விடியல் ஏற்படவில்லையே என்ற இந்தியக் குடிமக்கள் அனைவரது ஒட்டு மொத்த ஆதங்கத்தைதான் இந்த குட்டிக்கவிதை பிம்பமாய் பிரதிபலித்தது.

“அன்று
வியாபாரம் செய்ய வந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள்

இன்று
அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் செய்கிறார்கள்”

என்ற கவிஞர் வைரமுத்துவின் வைரவரிகள் முற்றிலும் உண்மை. அனைத்து தேர்தலிலும் குதிரைப்பேரம்தானே ‘ஜாம் – ஜாம்’ என்று நடந்துக் கொண்டு இருக்கிறது.  “Politics is the last refuge for scoundrels” என்று சாமுவல் ஜான்ஸன் சொன்னது மெய்தானோ?

இந்த சுதந்திரம் கிடைப்பதற்காக துப்பாக்கி தோட்டாக்களை மார்பில் ஏந்தியவர்கள் எத்தனைப்பேர்? தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் எத்தனைப் பேர்? ‘ஜாலியன்வாலா பாக்’ கிணற்றுக்குள் உயிர்துறந்தவர்கள் எத்தனைப்பேர்? வேதாரண்யத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தடியடி ஏற்றவர்கள் எத்தனைப் பேர்?

சுதந்திரம் கிடைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே,

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்தச் சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று”

என்று கூவினான் மகாகவி. கிடைக்காத ஒன்றை கிடைத்து விட்டதாக கூறுகிறானே, இவனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதோ? என்று அவனை பலரும் நையாண்டி செய்திருக்கக்கூடும்.

கவிஞனுக்கு தீர்க்கதரிசனம் என்பது ‘மூன்றாம் கண்’ போலும். வரப்போவதை வந்ததாக நினைத்து ஆனந்தத் தாண்டவம் ஆட நம்பிக்கையுறுதியும், தொலைநோக்கும் கொண்ட ஒருவனால்தான் இது சாத்தியமாகும். பாரதியிடம் அது மிகையாகவே இருந்தது.

“சுதந்திர கீதங்கள்
மதிப்பிழந்த நாட்டில்
தேசிய கீதங்கள்
தேவையே இல்லை”

என்று மிகச் சரியாகச் சொன்னார் மு,மேத்தா. நான் சிறுவனாக இருக்கையில் நாகூர் விஜயலட்சுமி கீற்றுக் கொட்டகையில் படம் பார்க்க போனதுண்டு. படம் முடிந்ததும் தேசிய கீதம் இசைப்பார்கள். எழுந்து நின்று ஆடாமல் அசையாமல் மரியாதை செய்பவர்கள் ஒரு சிலர்தான் தென்படுவார்கள். பெரும்பாலோர் வந்த வேலை முடிந்து விட்டதென நடையைக் கட்டுவார்கள்.

அதன் பிறகு, “தேசிய கீதங்கள் திரையரங்குகளில் தேவையில்லை” என்ற முடிவுக்கு அரசாங்கமே வந்து விட்டது. கவிஞர் சொன்னதைப்போல் சுதந்திரத்திற்கு மதிப்பு இல்லை என்று அவர்களே ஒத்துக் கொண்ட காரணத்தினாலும் இருக்கலாம்.

சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் அறுபதுக்குமேல் உருண்டோடி விட்டன. வெள்ளிவிழா, பொன்விழா யாவும் கொண்டாடிவிட்டோம்.

“எங்களுக்கோ
வெள்ளியும் தங்கமும்
விழாக்களின் பெயர்களில்தான்
வருகின்றன”

இதுவும் மு,மேத்தாவின் வரிகள்தான். வறுமைக் கோட்டுக்குக்கீழ் அவதியுறும் சராசரி இந்தியக் குடிமகனின் உள்ளத்து வெளிப்பாடாக இருக்கிறது இது . கவிஞர் தேசப்பிதாவைப் விளித்து இவ்வாறு புலம்புகிறார்.

“அமுதசுரபியைத்தான்
நீ தந்துச் சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம்”

என்ற கவிதை வரிகளில் ‘தேசத்தொண்டு’ எனும் போர்வையில் பொதுமக்களைச் சூறையாடும் அரசியல்வாதிகளை பிடித்துச் சாடுகிறார்.

சுதந்திரம் கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குப்பின் (1949), பாரதி கூத்தாடியதைப் போன்று கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனும் ‘சுதந்திரமே வாழ்க’வெனும் தலைப்பில் உணர்ச்சிவசப்பட்டு பாடுகிறார்.

“ஏவலராய், ஏதுமறி யாதவராய்க்
—கோழையராய், இரந்துண் போராய்ச்
சேவகராய்ச் சிரம்பணியும் அடிமையராய்ச்
—செயலிழந்த சிலைபோன் றோராய்க்
கேவலமாய் வாழ்ந்தஎமை யாவருடன்
—சமமாக்கிக் கீர்த்தி மிக்கக்
காவலராய் ஆக்குவித்த சுதந்திரமே
—வாழியநீ கடைசி மட்டும்!”

இப்படி ஆனந்தத் தாண்டவம் ஆடிய அவரது பேருவகை அதிக நாட்கள் நிலைத்து நிற்கவில்லை. ‘அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் (1953) எழுதிய கவிதையில் அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார்.

“சுதந்திர சூரியன் தோன்றிவிட்டால் – மக்கள்
—தொல்லை அகன்றிடும் என்றுரைத்தோம்
சுதந்திரம் வந்தது கண்டுகொண்டோம் – மக்கள்
—தொல்லை அகன்றிடக் காணவில்லை!

ஆளும் உரிமை அடைந்துவிட்டால் – மக்கள்
—அவலம் ஒழிந்திடும் என்றுரைத்தோம்
ஆளும் உரிமை அடைந்தவுடன் – நாமே
—ஆதிக்கம் செய்யத் துணிந்துவிட்டோம்!

மாற்றான் பிடிப்பை அறுத்துவிட்டால் – இங்கு
—மக்களின் ஆட்சி மலருமென்றோம்
மாற்றான் பிடிப்பு அகன்றபின்னே – ஏழை
—மக்களை நாமே மறைந்துவிட்டோம்!”

பெயரவில் சுதந்திரம் பெற்று, செயலளவில் சுதந்திரம் பெற முடியாத அவல நிலையை கவிஞர் திலகம் அழகாக சித்தரித்துக் காட்டுகிறார்.

மகாத்மா காந்தியின் உடமைகளை அண்மையில் ஏலம் விட்ட போது உலகம் முழுக்க பரவி இருந்த இந்தியக் குடிமகன்கள் அலறித் துடித்தனர். “மகாத்மாவின் பொருள்களை ஏலம் விடுவதா? விட்டேனா பார்!” என்று வரிந்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கினர். எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை அவற்றை இந்திய அரசாங்கம் ஏலம் எடுத்து இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

பருப்பொருள் பற்றினால் (Materialistic attachment) எந்தவித ஆதாயமும் இல்லை; இறைப்பற்றும், மனிதனை மனிதனாய் மதிக்கத்தெரிந்த சமுதாயப் பற்றுதான் நமக்கு இன்றிமையாதது என்ற கொள்கையைக் கடைப்பிடித்த காந்திஜியின் பொருள்களுக்காக இவர்கள் இப்படி சொந்தம் கொண்டாடி அடித்துக் கொள்கிறார்களே என்று நம்மை நினைக்கத் தூண்டுகிறது.

அவர் தனக்கு வேண்டாம் என்று நினைத்துதானே மற்றவர்களுக்கு தன் உடமைகளைப் பரிசளித்தார்? அந்த உடமைகளுக்காக ஏன் இவர்கள் இப்படி அடித்துக் கொள்கிறார்கள்? என்றெல்லாம் சிந்தனை ஓடியது.

மகாத்மாவின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்ட இவர்களுக்கு திடீரென்று எங்கிருந்து ஒரு பாசம் பொத்துக் கொண்டு வந்தது என்று தெரியவில்லை.

காந்திஜி, மதுவிலக்குக்காகவும், மதுவினால் ஏற்படும் தீமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்வதிலும் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்.

ஆனால் இன்று காந்தியின் பெயராலேயே கள்ளுக்கடைகளை திறக்கின்றார்கள். அவர் பெயரை வைத்துக் கொண்டு மதப்பிரிவினைச் செய்கிறார்கள். சிறுபான்மையினருக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள். மகாத்மா காந்தியின் பெயருக்கு இதைவிட ஒரு களங்கம் வேறென்ன வேண்டும்?

காந்திஜியின் உடமைகளை போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்தவரோ நமது மதிப்பிற்குரிய விஜய் மல்லையா எனும் சாராய மன்னர். ‘கிங்பிஷ்ஷர்’ பீர் விளம்பரத்தில் அரைகுறை ஆடையுடன் அழகிகளை போஸ் கொடுக்க வைத்து நவீன கலாச்சாரத்தை நாட்டுக்கு அறிமுகம் செய்த கோடீஸ்வரர்.

மதுவினால் கோடிகள் சம்பாதித்த இந்த புண்ணியாவான் மகாத்மாவின் உடமைகளை ஏலம் எடுத்து தன் பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறார் போலும்.  இந்த ஏலத்தினால் விஜய் மல்லையாவுக்கு கிடைத்த மகத்தான விளம்பரத்தினால், அவரது மது வியாபாரம் தன் சாராய சாம்ராஜ்யத்திற்கு மேலும் கோடிகளை குவிக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

மேலைநாடுகளும் கீழைநாடுகளும் பாபுஜியின் அகிம்சையின் மகிமையை உணர்ந்து அவரவர்கள் இந்த மகாத்மாவின் கொள்கைகளை சுவீகரிக்கத் துடிக்கும் இந்த பயங்கரவாத நிறைந்த உலகத்தில், நாம் காந்திஜியின் செருப்பையும், கண்ணாடியையும், கோப்பையையும், கடிகாரத்தையும்  இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வரும் வெற்றிக் களிப்பில் ஆகாயத்தில் மிதக்கிறோம்.

நாம் எழுப்பிய இந்த பூகம்பப் பிரச்சினையினால் ஆதாயம் அடைந்ததென்னவோ இதனை ஏலம் விட்டவர்கள்தான்.

இந்திய மானத்தைக் (?) 9.3 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்து காப்பாற்றியமைக்காக விஜய் மல்லையாவுக்கு குவிந்த பாராட்டுக்களோ ஏராளம் ஏராளம். இந்த கோடிகளின் விரயத்தை இந்தியாவில் ஏழ்மையில் வாடுபவர்களுக்கு உதவுவதில் அவர் செலவு செய்திருக்கலாம்.

இந்த பொருள்களை ஏலம் விட்ட ஜேம்ஸ் ஓடீஸின் நண்பர்  லெஸ்டர்  குர்ட்ஸ் என்பவரிடத்தில் மகாத்மா காந்தி சுடப்பட்டபோது சிந்திய ரத்தத்துளிகள் அடங்கிய துணியும், காந்திஜியின் பூவுடலின் சாம்பலும் இவருடைய பாதுகாப்பில் பத்திரமாக இருக்கின்றதாம்.

அடுத்ததாக இதனை ஏலம் எடுத்து இந்த சுதந்திர பூமியின் மானத்தைக் காப்பாற்றப் போகிறவர் எந்த கடத்தல் மன்னரோ, சாராய ராஜாவோ நமக்குத் தெரியாது.

நல்லவேளை, இந்த கூத்து யாவற்றையும் காண்பதற்கு தேசப்பிதா இன்று நம்மோடு இல்லை. இருந்திருந்தால், “குடி குடியைக் கெடுக்குமப்பா; இந்த ஈனப்பிழைப்பில் சம்பத்தித்த பணத்தைக் கொண்டு என்னுடைய பொருளை வாங்காதே!” என்று மல்லையாவுக்கு நல்லாவே அறிவுறுத்தி இருப்பார்.

சரி வாங்க! மறுபடியும் நாம் தலைப்புக்கு வருவோம். உண்மையிலேயே நமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா? நம்மால் உறுதியாகக் கூற முடியவில்லை.

இரவு வேளையில் கழுத்து நிறைய நகையணிந்து நங்கையொருத்தி எப்போது பயமில்லாமல் வீதியில் நடமாட முடிகிறதோ அப்பொழுதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி. இப்பொழுது நகைகளை வீட்டில் பூட்டி வைத்து விட்டு  வெளியில் தைரியமாக போய் வரக்கூட உத்தரவாதம் இல்லை, 

கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்றோ எழுதிய கவிதை வரிகளை இன்று நினத்துப் பார்க்கிறேன்.
 
“இன்னொரு
சுதந்திரம் வேண்டும்

இரவில்
எதைக் கொடுத்தான்?
எதை வாங்கினோம்
எவர் வங்கினோம்
ஏதும் தெரியவில்லை.

ஒரு பகற் பொழுதில்
உச்சி வெயிலில்
ஒரு சுதந்திரம் வேண்டும்”

இன்னொரு சுதந்திரம் நமக்கு கிடைக்குமா?

இசைமணியின் குரலில்

isaimani

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாண்புகளை எடுத்தியம்பும் எத்தனையோ இஸ்லாமியப் பாடல்கள் உண்டு. இஸ்லாமியப் பாடல்கள் என்றாலே எட்டுகட்டைச் சுதியில், ஊசி உடைகிற உச்ச ஸ்தாயியில்தான் பாட வேண்டும் என்பது எழுதாத ஒரு சட்டம் ஆகி விட்டது. நாகூர் E.M.ஹனீபா, காயல் சேக் முஹம்மது, ஜெய்னுல் ஆபிதீன், ஹஸன் குத்தூஸ் உட்பட எல்லோரும் இதே பாணியைப் பின்பற்றியவர்கள்தாம். “உலக முஸ்லீம்களே நில்லுங்கள்” என்று பாடும் காயல் ஷேக் முஹம்மதின் பாட்டைக் கேட்டால் உலக முஸ்லீம்களை ஓட வைக்க அவர் பாடாய்ப்படுவதுபோல் இருக்கும். (இப்படி பயமுறுத்துவதைப்போல் கத்தினால் யார்தான் நிற்பார்கள்?

மென்மையான இசையிலும் இஸ்லாமியப் பாடலை முழங்கலாம் என்ற பாணி இவர்களுக்கு ஏனோ தெரியாமலே போய் விட்டது. அதற்கு மாறாக நாகூர் எம்.எம். இசைமணி யூசுப் அவர்களின் சாந்தமான சங்கீதம் கலந்த குரலில் மெல்லிசையைக் கேட்பதென்றால் அது ஒரு சுகமான அனுபவம். தென்றல் மிதந்துவரும் கீதம் நம் உள்ளத்தின் ஆழம் வரை வந்து ஊடுறுவிப் போகும். இசைமணி பாடிய ஒரு பாடல்; அது எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு தட்டாது.

மண்ணகத்தின் இழிவு மாற்றி
விண்ணகத்தின் உயர்வு சாற்றி
பொன்னகத்தில் அண்ணல் நபி வந்தார்; – அவர்
தன்னகத்தில் சாந்தியின்பம் தந்தார்

என்ற நினைவில் நிற்கும் அருமையான பாடலை இயற்றியது கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன் அவர்கள்.

கல்லக்குடி கொண்டான்

muka

தேர்தல் நேரம் வந்துவிட்டால் போதும். தமிழகத்தின் மூலை முடுக்குகளில், பட்டி தொட்டிகளில்,  ஒலிபெருக்கிகளில் அவரவர் கட்சிகளின் கொள்கை முழக்கப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கி விடும்.

தி.மு.கழக மேடைகளில் கட்டாயம் சிம்மக்குரலோன் நாகூர் ஹனீபாவின் வெண்கலத் தொனி முழக்கம் அதிரடியாய் முழங்கும். அதிலும் மிக முக்கியமாக ஒரு பாடல்; அது ஒலிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியை போற்றி புகழக்கூடிய பாடல் அது. அந்த பாடலைக் கேட்டு விட்டு கழகத் தொண்டர்கள் நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேற, உடன்பிறப்புகள் ஓடிஓடி போஸ்டர் ஒட்டுவார்கள்; தோரணம் கட்டுவார்கள்; தேர்தல் பிரச்சாரத்தில் ஊன் உறக்கம் மறப்பார்கள்.

டால்மியாபுரத்தை ‘கல்லக்குடி’ என்று பெயர் மாற்றம் செய்வதற்கு கலைஞர் தண்டவாளத்தில் தலைவைத்து (ரயில் தன் மீது ஏறாது என்று உறுதி செய்த பின்புதான்) ‘கல்லக்குடி கொண்டான்’ என்ற பட்டத்தையும் பெற்றார்.

“கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே !” என்ற பிரசித்த பெற்ற அந்த கொள்கை முழக்கப் பாடலை எழுதியவர் யார் தெரியுமா?

சாட்சாத் சாரணபாஸ்கரனேதான்.

இதோ அந்தப் பாடல் :

கல்லக்குடி கொண்ட
கருணாநிதி வாழ்கவே! – மக்கள்
உள்ளம் குடி கொண்ட
உண்மைத் தலைவர் வாழ்கவே!

பொன்னான தமிழ்நாட்டின்
அண்ணாவின் தம்பியாய்
பொலிகின்ற கருணாநிதி வாழ்கவே!

பன்னாடும் புகழ்ப்பாடி
பணிகாட்டி அணிகாட்டி
கொண்டாடும் கருணாநிதி
கண்ணான கருணாநிதி – கழகத்தின்
கண்ணான கருணாநிதி

அரிதான எழுத்தாற்றல்
அழகான உரையாற்றல்
அமைந்திட்ட கருணாநிதி
பெரிதான கவியாற்றல்
புகழான நடையாற்றல்
நிறைந்திட்ட கருணாநிதி – புகழ்
பூக்கும் கருணாநிதி – தமிழ்
காக்கும் கருணாநிதி

ஏடெல்லாம் புகழ்கின்ற கதை தீட்டி
நாடகக்கலை வாழ பணியாற்றினார்
கேடெல்லாம் களைகின்ற நோக்கோடு
சினிமா வசனத்தில் அணி ஏற்றினார்
ஈடில்லா கருணாநிதி எங்கள்
இதயத்தின் கருணாநிதி
அண்ணாவின் அடிநின்று
அழகான நெறி செல்லும்
அதிமேதை கருணாநிதி
ஐந்து முறை முதல்வராக
ஆட்சி பீடம் ஏறி
தந்த வாக்குறுதிகளை அன்றே
நிறைவேற்றிய கருணாநிதி

குண்டேந்தும் பீரங்கி வந்தாலும்
கொள்கையில் மாறாத கருணாநிதி
பண்போங்கும் கருணாநிதி – கொடும்
பகை வெல்லும் கருணாநிதி
இமயத் தோள் கொண்ட கருணாநிதி
பார்புகழும் கருணாநிதி – என்றும்
பேர் நிலைத்த கருணாநிதி
கல்லல்குடி கொண்ட
கருணாநிதி வாழ்கவே!