Archive for the ‘Uncategorized’ Category

sarana-bhaskaran

தமிழக முஸ்லிம் சமுதாய சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்று நிற்பவர்களில் ஒருவர் கூத்தாநல்லூர் தந்த கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் அவர்கள். அவரின் இயற்பெயர் டி.எம்.எம். அஹமது என்பதாகும். கவிதா மண்டலத்தில் சாரண பாஸ்கரன் என்னும் பெயர் ஒளிசிந்தும் நட்சத்திரம் போல் இன்றைக்கும ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அவர் எழுதிய யூசுப் – ஜுலைகா காவியம் இறவா இலக்கியங்களில் ஏற்றமுள்ளதாக என்றும் இலங்கும் படைப்பாகும்.

டிசம்பர் 11-ல் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டையொட்டி கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் கவிதைகளையும் மற்றுமுள்ள அவரின் சொல்லோவியங் களையும் நாட்டுடைமையாக்கி, அவரின் நலிந்த குடும்பத்துக்கு நன்மை செய்யும்படி தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடத்தில் கோரிக்கை வைத்தோம். மாண்புமிகு துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி, கவிஞரின் நூற்களை நாட்டுடைமை ஆக்குவதற்குரிய ஆயத்தங்கள் செய்யும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர் என்னும் நற்செய்தி கிடைத்திருக்கிறது.

டிசம்பர் முஸ்லிம் லீக் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு `நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்’விருது வழங்கிச் சிறப்பிக்க உள்ளோம். `கல்லகுடி கொண்ட கருணாநிதி வாழ்கவே – உன் உள்ளம் குடி கொண்ட உண்மை தலைவன் வாழ்கவே! ’’ என்னும் கழகப் பாடலை எழுதியவர் சாரண பாஸ்கரன்தான். இப்பாடலை இசைமுரசு நாடு முழுவதிலும் பாடியுள்ளார்; பல லட்சம் பேர் உள்ளத்தில் இப்பாடலை இடம் பெறச் செய்துள்ளார்.

இதே கவிஞர்தான் இதையும் எழுதினார்:

நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
செல்லுங்கள் துணிந்து செல்லுங்கள்
வெல்லுங்கள் பகைமை வெல்லுங்கள்
சொல்லுங்கள் தக்பீர் சொல்லுங்கள்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்
முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்!

– இந்தப் பாடலை நாகூர் ஹனீபா அவர்கள் பாடும்போதெல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள், நாரே தக்பீர் என்றதும் `அல்லாஹு அக்பர்’ என்று முழக்கமிடுவதை மண்ணும் கேட்டிருக்கிறது! விண்ணும் கேட்டிருக்கிறது.

அந்த அற்புதப் பாடலில் வரும் பின்வரும் வரிகளையும் படித்துப் பாருங்கள். மாநாட்டுக்கு வருகை தரத் துடித்து எழுவீர்கள்.

“அல்லாஹ்வைத் தவிர யார்க்கும்
அஞ்சிடாத சிங்கங்காள்
அண்ணல் நபி வழியில்
அணிவகுத்து நில்லுங்கள்
நல்லவர்க்குக் கைகொடுத்து
நன்மைசெய முந்துங்கள்
நடுவில் வந்த தூக்கம் நீக்கி
நெஞ்சுயர்த்தி நில்லுங்கள்!’’

நெஞ்சுயர்த்தி நிற்பதையும் அணிஅணியாய்ச் செல்வதையும் அல்லாஹ் பெரியவன் என்று சொல்வதையும் காணப் போகிறோம்! மாலையில் நடக்கும் பிறைக்கொடி பேரணி மூன்று மணிக்கு வேளச்சேரி நெடுஞ்சாலை காமராசர்புரம் அண்ணா விளையாட்டுத் திடலில் தொடங்கி ஐந்து மணியள வில் தாம்பரம் ரயில்வே மைதானத்தில் லட்சக்கணக்கில் நுழையப் போகிறோம்!
இரவு பகல் பாராது உழைத்து உழைத்தே
இணையற்ற சாதனையில் வெற்றிகண்டே
உறவு முறை பாராது உண்மை பார்க்கும்
ஒப்பரிய காயிதெ மில்லத் வாழ்க

– என்று கவிஞர் திலகம் பாடினார்! அந்தத் தலைவர் பெயரால் – கண்ணியத் தென்றல் காயிதெமில்லத் பெயரால் எழுந்து நிற்கும் நுழைவாயில் வழியே தான் நுழையப் போகிறோம்!
புதிய வரலாற்றில் நுழைவதற்கு புறப்பட்டு வாருங்கள் தக்பீர் முழங்கி வாருங்கள்!

சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்
சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்
-என்று கூறி வாருங்கள்! நாட்டுக்கு
அதைக் கூற வாருங்கள்.

நன்றி : முஸ்லீம் லீக்.காம்

 

கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் என்ற டி.எம்.அஹ்மத்

sarana-bhaskaran-new-new1

தஞ்சை மாவட்டம் கூத்தாநல்லூரில் 20.04.1923 ல் பிறந்தவர் சாரண பாஸ்கரனார். இறைத் தூதர்களில் ஒருவரான யூசுப் நபியின் வாழ்க்கை வரலாற்றை கருப்பொருளாக வைத்து ’யூசுப் சுலைகா’ என்ற பெருங்காப்பியம் படைத்திருக்கிறார். இவர் மணியோசை, சாபம், சங்கநாதம், நாடும் நாமும், மணிச்சரம், பிரார்த்தனை, சிந்தனைச்செல்வம், இதயக்குரல் என்ற பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். ’ரோஜாத் தோட்டம்’ என்ற நாடகத் தொகுப்பு நூல் ஒன்றும் படைத்திருக்கிறார். இவரது ‘பாலயோகியின் பிரார்த்தனை’ என்ற நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கவிஞர் சாரண பாஸ்கரனார் என்ற பெயருள்ளவர் இந்துவாகத்தான் இருக்க வேண்டும், அவர் எப்படி இஸ்லாமைச் சார்ந்த யூசுப் நபிகள் பற்றி பெருங்காப்பியம் செய்திருக்க முடியும் என்றெண்ணினேன். எனவே வலைத்தளத்தில் தேடியபொழுது, ’உயிர்மை’ என்ற தளத்தில் கழனியூரன் எழுதிய முஸ்லீம் நாட்டாரியல் – தாலாட்டு என்ற கட்டுரையில், கவிஞர் சாரண பாஸ்கரனாரின் பெயரை குறிப்பிடுகையில் அவரது இயற்பெயர் டி.எம்.அஹ்மத் எனத் தெரிய வந்தது. கவிஞர் சாரண பாஸ்கரனார் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய தாலாட்டுப் பாடல்கள் சுவையாக உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்.

தள்ளாடிக் காலூன்றித்
தகிங்கனத்தோம் தாளமிட்டு
சொல்லாட வந்தவனே
சோர்வகற்றத் தூங்கி விழி!

என்ற பாடலில் குழந்தையின் தளர் நடை பற்றிய வர்ணனை மிக அழகாகப் பதிவாகியுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் இவரை ’தமிழோடு நிலைத்திருக்கப் பிறந்தவன்’ என்று பாராட்டியிருக்கிறார். இவர் 63 ஆண்டுகள் வாழ்ந்து 1986 ல் இயற்கை எய்தினார்.

’யூசுப் சுலைகா’ காப்பியம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களின் அரசியல், சமுதாய, பண்பாட்டு வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. மிஸ்ர் நாட்டில் முடியாட்சி இருந்தாலும், அது மக்களைத் துன்புறுத்தும் கொடுங்கோலாட்சியாய் இல்லாமல் மக்கள் மகிழும் வண்ணம் நல்லாட்சியாய் இருந்தது.

மிஸ்ர் மன்னர் உழவர்களுக்கு உதவுவதைத் தன் தலையாய கடமையாக்க் கொண்டுள்ளார். விளைகின்ற தானியத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் வரியாக வசூலிக்கப்பட்டது. உழவர்கள் ஆட்சியாளர்களிடம்,

’எம் நிலத்தை ஒழுங்கு செய்து
உணவுப் பொருள் விளைவிக்க உதவுவீரேல்
ஆனமட்டும் பயிர்விதைத்து விளையுமட்டும்
அடுத்தவர்க்கும் வழங்கிடுவோம்’

என வேண்டி நிற்பதால் அவர்கள் உழவுத் தொழில் புரிந்து கிடைக்கும் பயன்களை மற்றவர்க்கும் வழங்குவோம் என்று ஆர்வமுடன் இருந்தனர்.

மேலேயுள்ள கவிதையை எனக்கு பிடித்திருந்தது. அதனாலேயே இந்தக் கவிதையையும், கவிஞரையும் பற்றி விரிவாக எழுதலாயிற்று. இதை மாதிரியாக வைத்து, ஒப்பில்லா உழவு அல்லது தேவை ஒரு விவசாய புரட்சி என்ற தலைப்புக்கேற்றபடி 16 வரிகளில் யாரேனும் கவிதை படைத்தால் மகிழ்வேன்.

ஆதாரம்:பேராசிரியர்.ச.அபீபுர் ரகுமான் அவர்களின் கட்டுரை – ’செந்தமிழ்ச் செல்வி’ திங்கள் இதழ் மார்ச் 2000

பார்க்க சுட்டி

கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் வாழ்ந்த இல்லம்

தகவல் & புகைப்படம் : சடையன் சாபு

1001

சாரணபாஸ்கரனாரின் திருமண வாழ்த்துப்பா

prof-ismail

(புகைப்படம் தந்து உதவியர் பேராசிரியர் எம்.எம்.ஷாஹூல் ஹமீது அவர்கள்)

ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் முதல்வர் E.P.முஹம்மது இஸ்மாயீல் பழகுவதற்கு மிகவும் இனிமையான  மனிதர்.  மிகச் சிறந்த கல்லூரி   நிர்வாகி. எங்கள் குடும்பத்தில் ஏறக்குறைய அனைத்து பேர்களும் ஜமால் முகம்மது கல்லூரியில் படித்தவர்கள்தான்.

எங்களுக்கு முந்திய தலைமுறையினரில் எனது சிறிய தந்தைமார்கள் ஜமால் முகம்மது கல்லூரியில் படிக்கையில், கல்லூரிக்கு அருகாமையிலிருந்த சேதுராமபிள்ளை காலனியில் தனி வீடு எடுத்து தங்கிப் படித்தனர்.

அதே காலனியில்தான் அப்போது பேரா. முஹம்மது ஈஸா, பெரும்புலவர் பேரா.சி,நயினார் முகம்மது, பேரா.E.P.முஹம்மது இஸ்மாயீல் போன்ற ஜமால் STALWARTS தங்கியிருந்தனர். எனது குடும்ப அங்கத்தினருக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தனர்.

எனது தாய்வழிப் பாட்டனார் அவர்களின் பெயரில் “Hautin Block” கட்டிடத்தை கல்லூரி வளாகத்தில் வணிகத்துறைக்காக நிர்மாணிக்க காரணமாக இருந்தவரும் பேரா.E.P.முஹம்மது இஸ்மாயீல் அவர்கள்தான்.

பேராசிரியரின் குடும்பம் நாகூர் வரும்போதெல்லாம் எங்கள் வீட்டில் தங்குவார்கள். பேராசிரியரின் மனைவியின் உறவினர் மெஹர் பாஷா பஹ்ரைனில்தான் ரொமப காலம் முன்பு இருந்தார்.

பேராசிரியருக்கு மூன்று மகன்கள். டாக்டர் நியாஸ், கலீல், இம்தியாஸ்.

பேராசிரியர் E.P.முஹம்மது இஸ்மாயீல் M.Com அவர்களுக்கு 17.04.1955 வருடம் திருமணம் நிகழ்ந்தது, மணமகள் பெயர் S.A.நூர்ஜஹான் பேகம். இந்த திருமணம் நடந்தேறியபோது மணமகன் முஹம்மது இஸ்மாயீல் ஜமால் முகம்மது கல்லூரியின் வணிகத்துறை தலைமைப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

அவருடைய திருமணத்தின்போது கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் வரைந்த திருமண வாழ்த்துப்பா இது:.

இருமனத்தை ஒருமனமாய் இணைய வைத்து

—இகவாழ்வின் சுகம்யாவும் எய்த வைக்கும்

திருமணத்தை உவந்தேற்று உவகை பூக்கும்

—திருச்செல்வர் முஹமதிசு மாயில் வாழ்வின்

நறுமணத்தை நுகர்ந்திடவே அருந்து ணையாய்

—நற்குணத்தின் பிறப்பிடமாம் நூர்ஜ ஹானைப்

பெருமையுடன் அடைந்திட்ட சிறப்பு என்ணிப்

—பெருந்தகையாம் இறையருளை வணங்கு கின்றேன் !

 

வணிகக்கலை ஆய்ந்துணர்ந்து வல்லோ ராகி

—வந்தவர்க்குக் கற்பிக்கும் நல்லோ ராகி

புனிதக்கலை போதிக்கும் இல்ல றத்தே

—புகழ்நாட்டும் அருங்கலையில் சிறப்பு காணக்

கனிவுநிறை முஹம்மதிசு மாயில் வாழ்வின்

—கலங்கரையாய் நாயகியாய் நூர்ஜ ஹானை

இனிதடைந்த இந்நாளின் சிறப்பை எண்ணி

—எங்கும்நிறை இறையருளை வணங்கு கின்றேன் !

 

சீர்த்திமிகும் குலப்பெருமை செழித்து ஓங்க

—செழுங்குணத்தின் திலகமெனத் திகழ்ந்து, வாழ்வின்

பூர்த்திதரும் இல்லறத்தின் அரரசி யாகும்

—பூவைமணி நூர்ஜஹான் பொலிவுக் கொள்ளக்

கீர்த்திமிகும் முஹம்மதிசு மாயில் அன்பில்

—குன்றாமல் என்றேன்றும் வாழ்வ தற்கு

நேர்த்தியருள் இறையருளை இனிதே வேண்டி

—நெஞ்சார வாழ்த்துகின்றேன் மகிழுகின்றேன் !

 

அன்பினையே அணிகலனாய் அகத்தில் பூண்டு

—அறவாழ்வே இகவாழ்வாய்ச் செயலிற் றாங்கிப்

பண்பினையே பெரும்பொருளாய்த் திரட்டிச் சேர்த்துப்

—பல்லாண்டும் நல்வாழ்வு வாழ்வ தற்கே

ஒன்றுபடும் முஹம்மதிசு மாயில் நெஞ்சம்

—ஒளிபெறவே நூர்ஜஹான் வாழ்வு பொங்க

என்றும் நிறை பெருங்கருணை சொரியும், வல்ல

—ஏகறப்புல் ஆலமீனை இறைஞ்சு கின்றேன் !

 

நாடுயர வீடுயர நலிந்தோர் வாழ்வில்

—நலமுயர வளமுயர உதவுங் கல்வி

தேடுபவர்க் குதவிடவே இதய வாசல்

—திறந்துவிட்ட இசுமாயில் இல்லங் காக்கும்

பீடுபெற்ற நூர்ஜஹான் பேறு பெற்றுப்

—பெருவாழ்வு வாழ்ந்திடவே, இல்லந்தோறும்

தேடரியப் பேரறிவு செழித்து ஓங்கச்

—செய்கின்ற சேவையிலே நிலைத்து வாழ்க !

நாடும் நாமும்

sarana

நன்றி : பரக்கத் அலி (கவிஞர் சாரண பாஸ்கரனாரின் புதல்வர்)

image

ஏ.வி.எம்.ஜாபர்தீன் அவர்களின் திருமணத்தின் போது எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் மற்றும் கவிஞர் சாரணபஸ்கரன்

 

தினகரன் வாரமஞ்சரி

தினகரன் வாரமஞ்சரி

புகழ் மாலை

என்னிலே உணர்வை ஆக்குவிக்கும்
எல்லை யில்லா அருட்கடவுள்
தன்னுடைத் துணையாய்த் துவங்குவதாய்ச்
சாற்றிய காப்பின் விளைவிதுவோ?
தன்னுடைத் தூதர் காவியத்தைத்
தானே எழுதித் தந்தனனோ?
என்னவென் றிதையே இயம்பிடுவோம்?
எல்லாப் புகழும் இறைவனுக்கே!

பதியாம் அல்லாஹ் வின் தூதாய்ப்
பதியாம் கன் ஆன் பூபதியாய்ப்
பதியாம் யாக்கூ பின்மகவாய்ப்
பார்புகழ் மிஸ்ரு அதிபதியின்
பதிசேர் மதிசேர் அமைச்சாகிப்
படியில் தைமூஸ் திருமகளார
பதிவிர தாசிரோன் மணியுடைய
பதியாய்ப் போந்த பெருமானார்,

ஆரணம் போற்றும் அழகுருவார்
அன்பே வடிவாம் திருவுருவார்
காரணச் சரிதம் தீந்தமிழின்
கனக முடியின் பெருமணியாய்ப்
பூரண மாகச் செய்வித்துப்
பொன்றாப் புகழைப் பூண்டனனே!
சாரண பாஸ்கரன் அஹ்மதெனும்
சம்பன்ன யோக நாவலனே.

வாழி அவன் தன் நற்பெயரும்
வளர்மதி போன்று வளர்ந்தோங்க
வான்தன் காப்பியமும்
வன்மை நிலைபெற் றுயர்ந்தோங்கி!
வாழி அவன்தன் கோத்திரமும்
வளம்பல கெழுமி மிளிர்ந்தோங்கி
வாழி வான்பூ உள்ளவரை
வான்புகழ் ஓங்கி வாழியவே.

சென்னை
1-1-57
M.R.M. அப்துற் றஹீம்