ஒரு ரயில் பிரயாணத்தின் விளைவு

sarana

ஒருமுறை கவிஞர் சாரண பாஸ்கரன் (T.M.M. அஹ்மத்) அவர்கள் சென்னை செல்வதற்காக திருச்சி ஜங்ஷனில் காத்திருக்கிறார். முன்பதிவு செய்யப்படாத மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம்   செய்ய வேண்டிய சூழ்நிலை.

இரண்டு இரயில்கள் வருகின்றன.  இரண்டிலும் நல்ல கூட்டம். கால் வைக்கக் கூட இடமில்லை. அந்தளவு கூட்ட நெரிசல். நீண்ட நேரத்திற்குப் பிறகு,  மூன்றாவதாக ஒரு ரயில் வருகிறது. முண்டியடித்துக் கொண்டு கவிஞர் ஏறி விடுகிறார்.  வேறு வழியில்லை

இதிலும் ஏகப்பட்ட நெரிசல். நின்று கொண்டே பயணிக்கிறார்.  குடும்பத்தோடு பிரயாணம் செய்யும் ஒருவர் அவருடைய பரிதாப நிலையைக் கண்டு இரக்கப்பட்டு தன் மடியில் படுத்திருந்த குழந்தையைத் தூக்கி தன் காலடியில் பெஞ்சுக்கு கீழே படுத்த வைத்துவிட்டு அவருக்கு உட்காருவதற்கு இடம் கொடுக்கிறார்.

அவருக்கும் கவிஞருக்கு இடையே உரையாடல் நடைபெறுகிறது. அந்த உரையாடல் அவருக்குள்ளே ஒரு பெரும் மாற்றத்தை உண்டு பண்ணுகிறது.  இதோ அந்த உரையாடல்

பிரயாணி: உங்களின் சொந்த ஊர் எது?

கவிஞர்: தஞ்சை ஜில்லா

பிரயாணி: தஞ்சை ஜில்லாவே உங்களின் ஊரா?

கவிஞர் : அப்படிப் பார்க்கப்போனால், பாரத தேசமே என் ஊர்தான்

பிரயாணி: பாரதம் உங்களுக்கு மட்டுமா, நம் எல்லோருக்குமே சொந்த ஊர்தான் ! நான் கேட்டது நீங்கள் பிறந்த ஊரை- வாழும் ஊரை..?

கவிஞர்: தஞ்சை ஜில்லாவிலே ஒரு சிறு கிராமம்; பெயர் கூத்தாநல்லூர்.

பிரயாணி: மன்னார்குடிக்கும் திருவாரூருக்கு மிடையே உள்ள கூத்தாநல்லூர்தானே?

கவிஞர்: ஆமாம். அதே ஊர்தான்.

பிரயாணி: அந்த ஊரிலே கொஞ்ச காலத்துக்கு முன்னால் சாரணபாஸ்கரன் என்று ஒரு கவிஞர் இருந்தாரே, அவர் இப்போது இருக்கிறாரா, இறந்து விட்டாரா?

கவிஞரைப் பற்றி கவிஞரிடமே வீசப்பட்ட இந்த கேள்வியை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டுப் போகிறார். அந்த பிரயாணி இப்படியொரு கேள்வியைக்  கேட்டதற்கு நியாயமான காரணம் இருக்கத்தான் செய்கின்றது.

1942-ஆம் ஆண்டு தன் எழுத்துலகப் பணியைத் தொடங்கிய கவிஞர், “மணியோசை” (1946),  “சாபம்”, “சங்கநாதம்”, “இதயக்குமுறல்” ((1947-1951),  “யூசுப் ஜுலைகா” (1956), “மணிச்சரம்” (1959), என   பற்பல நூல்களை வெளியிட்டார்.

1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருடைய எந்த நூலும் வெளிவரவில்லை. இந்த ரயில் பிரயாண உரையாடல்  நடைபெற்ற ஆண்டு 1977.   அதாவது, கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் மெளனம்.

அந்த பிரயாணி கவிஞரைப் பார்த்து “கவிஞர் சாரண பாஸ்கரன் இறந்து விட்டாரா?” அன்று அவரிடமே வினவியதில் எந்த ஓர் ஆச்சரியமும் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். ஏனெனில் பிரபலமாக இருக்கும் ஒரு கவிஞன் எப்போதும் மக்கள் தொடர்பிலேயே இருக்க வேண்டும். இல்லையெனில் காலம் அவனை மறந்துவிடும்.

பிரயாணி : (மீண்டும் கேட்கிறார்)  நான் கேட்டதற்கு பதிலில்லையே, அவர் இருக்கிறாரா, இறந்து விட்டாரா?

கவிஞர்: (உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு) அவர் இறக்கவில்லை, இருந்துக்கொண்டுதானிருக்கிறார்.

பிரயாணி : அவர் நம்மோடு வாழ்ந்துக் கொண்டுதானிருக்கிறாரா? அதற்கான அடையாளம் தெரியவில்லையே?

கவிஞர் : ம்…ம்ம்… (சற்று மெளனம்)

பிரயாணி : ஒரு கவிஞர் உயிரோடிருகின்றான் என்றால், அவன் கவிதைகள் உலாவிக் கொண்டிருக்க வேண்டுமே ! அவர் கவிதைகளையே காண முடியவில்லை. அவர் எழுதிய எந்த புத்தகமும் இந்த தலைமுறையினர் வாங்க முடியவில்லை. எப்படி அவர் உயிரோடிருக்கிறார்?

கவிஞர்: காலமும் சூழ்நிலைகளும் அவரை முடக்கிவிட்டன. அதனாலேயே வாய் பொத்தி ஊமையாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

பிரயாணி: கவிஞனாகப் பிறந்தவன் எப்படி ஊமையாக வாழ முடியும்? அவன் இறந்து விட்டால்கூட  நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் உயிர்க் கவிதைகளின் சிருஷ்டி கர்த்தாவாயிற்றே??

கவிஞர்: அவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவரது எந்தெந்த புத்தகங்களை படித்திருக்கிறீர்கள்?

பிரயாணி: அவரது எல்லா புத்தகங்களையும் படித்திருக்கிறேன். அதில் ஏதும் என் சந்ததிகளுக்குத்தான் இப்போது கிடைக்கவில்லை.

ரயில் பயணத்தில் ஏற்பட்ட இச்சந்திப்பின்போது ஏற்பட்ட உரையாடல் கவிஞரின் உள்ளத்தில் ஒரு பெரும் பாதிப்பை உள்ளாக்குகிறது. சிந்திக்கிறார்.  தானெழுதிய பழைய புத்தகங்களை மறுபதிப்பு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்கிறார். இல்லையென்றால் சமுதாயம் அவரை உதறித்தள்ளிவிடும் என்ற உண்மையைப் புரிந்துக் கொள்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் எழுதிய புத்தகங்களின் பிரதி அவரிடம் ஒன்றுகூட இல்லாமல் போனதுதான்.

அதற்குப் பிறகு தானெழுதிய புத்தகங்கள் யார் யாரிடம் இருக்கிறது என்று மும்முரமாக தேடுதல் வேட்டையில் இறங்குகிறார் கவிஞர்.

பேராசிரியர் ஜி.சுப்பிரமணியம் பிள்ளை தன்னிடமிருந்த “சாபம்” நூலைத் தருகிறார். பேராசிரியர் கே.எம்.காதர் முஹயிதீன் அவர்கள் தன் திருமணப் பரிசாக பெற்றிருந்த “யூசுப் ஜுலைகா’ நூலைத் தருகிறார். “மணிச்சரம்” நூலை ஆதம் A.நெய்னா முஹம்மதுவிடமிருந்து கிடைக்கிறது, “நாடும் நாமும்” என்ற பெயரில்  அவரெழுதிய நூலை M. செய்யது முஹம்மது (ஹஸன்) தன் மகள் பாத்திமாவிடமிருந்து பெற்றுத் தருகிறார்.

By Abdul Qaiyum

இதோ என் கையில் தவழும் “கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனாரின் கவிதைகள்” (1977) என்ற இந்த நூல் அதன் பிறகு அக்கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து வெளியிடப்பட்டது. (இந்த நூலை நான் பெறுவதற்கு நான் பட்ட பாடு எனக்குத் தெரியும், பூதமங்கலம் தாஜ் அண்ணன் அவர்களுக்கும் அவரது துணைவியார் பஷீரா தாஜ் அவர்களுக்கும்    நான் மிகவும்  கடமைப்பட்டிருக்கிறேன்)

அந்த ரயில் பயணத்தின் சந்திப்பின்போது இந்த உரையாடல் கவிஞருக்கும் அந்த பிரயாணிக்குமிடைய நடைபெற்றிருக்காவிட்டால் இந்த நூல் இந்நேரம் என் கையில் தவழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

அப்துல் கையூம்

நாடும் நாமும்

sarana

நன்றி : பரக்கத் அலி (கவிஞர் சாரண பாஸ்கரனாரின் புதல்வர்)

கவிஞர் திலகமும் காயிதேமில்லத்தும்.

FB_IMG_1433712888302

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

Jaffardeen1 Jaffardeen2

 

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்

என்ற கவிஞர் வாலியின் பாடல் என் காதுகளில் ரீங்காரமாய் ஒலித்தபோது எனக்கு ஏ.வி.எம்.ஜாபர்தீனின் நினைவுகள்தான் மனதில் அலைபாய்ந்தன.

ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியர் கூறியதைப் போன்று ‘உலகமெனும் நாடக மேடை’யில் நடிப்பதற்கு எத்தனையோ மனிதர்கள் வருகிறார்கள்; போகிறார்கள். அவர்கள் எல்லோரும் நம் மனதில் நிலைபெற்று நின்று விடுவதில்லை. சிலர் வருவதும் தெரியாது; போவதும் தெரியாது. வெகுசிலரை மாத்திரம் அவர்கள் நம் கண்ணை விட்டு மறைந்த பின்னரும் நினைத்துப் பார்க்கிறோம்; அவர்தம் செயலைப் போற்றுகிறோம்; விழா(த) நாயகர்களுக்கு விழா எடுக்கிறோம்.

கதாநாயகனாக மேடைக்கு வருபவர்களை விட சிற்சமயம் ‘கெளரவ’ நடிகர்களாக அரங்கேறுபவர்கள்தான் நம் மனதை திருடிச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் “சமநிலைச் சமுதாயம்” கெளரவ ஆசிரியர்  ஏ.வி.எம்.மெய்யப்பன்.

தெரிந்தேதான் எழுதுகிறேன். எப்பொழுதும் உண்மையையே பேசும் ஜாபர்தீனை மெய்யப்பன் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கக்கூடும்?

இவர் தாளாளர் மட்டுமல்ல. தாள் + ஆளரும்கூட. பத்திரிக்கைத் தாளை ஆண்டவரை  தாள்ஆளர்  என்று கூறுவது பொருத்தம்தானே?

ஜாபர்தீன், வாழ்க்கை நாடகத்தில் ஏற்று நடித்த பாத்திரங்கள் பலவுண்டு. தொழிலதிபராக, கொடை வள்ளலாக, இலக்கியவாதியாக, சமுதாயக் காவலராக, சிறந்த பண்பாளராக, நல்ல படைப்பாளியாக, முற்போக்கு சிந்தனைவாதியாக, இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொருளாளராக – இப்படியாக பன்முகம் கொண்ட கீர்த்திமிக்க பாத்திரப்படைப்பு அந்த சூத்திரதாரி. அவரை  இமய விளிம்பிற்கு உயர்த்தியது அவரது  கடின உழைப்பு.

 மாபெரும் சபைகளில் நீ நடந்தால்உனக்கு

மாலைகள் விழ வேண்டும்ஒரு

மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்.”

என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் இவருக்கும் அச்சில் வார்த்ததுபோல் பொருந்துகிறது.

1975-ஆம் ஆண்டு “கூத்தாநல்லூர் பாரதிதாசன்” என்று போற்றப்படும் கவிஞர் சாரணபாஸ்கரனுக்கு பொருளுதவி தேவைப்படுகிறது. யாரிடமும் சென்று ‘வெறுமனே’ கையேந்த அவரது மனம் இடங் கொடுக்கவில்லை. தமிழ்ப் படித்த கர்வம் அவருக்குண்டு.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் தன்னை சீராட்டி பாராட்டி வளர்த்த தமிழன்னையையே துணைக்கு அழைக்கிறார் கவிஞர். தன் குழந்தைக்கு ஒரு சோகமென்றால் தாயானவள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பாளா?

எழுதுகோலை எடுக்கிறார். மளமளவென்று தன் சோகத்தை வேகமாய் ஒரு காகிதத்தில் வடிக்கிறார். தான் படித்த தமிழ் தன் துன்பத்தை போக்கும் என எண்ணுகிறார்.

எழுத முடிவெடுத்தாகி விட்டது. இனி யாருக்கு எழுதுவது? அவன் இன்பத்தமிழையும், இதயத்தையும் ஒருசேர புரிந்துக் கொள்பவனாக இருக்க வேண்டும். ‘அழைத்தவர் குரலுக்கு வருபவனாக இருக்க வேண்டும். பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிபவனாக இருக்க வேண்டும். காற்றடித்தால் வீடாகவும், கடுமழையில் குடையாகவும், ஆற்றாலழுதால் அழுத கண்ணீரை அங்கே துடைக்கும் கையாகவும்’ இருக்க வேண்டும்.

 “அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும் உடையான் சடையன்”

என்ற பெருமைக்குரிய சடையப்ப வள்ளலின் நினைவு கவிகம்பனுக்கு வந்ததைப்போன்று கவிஞர் சாரண பாஸ்கரனுக்கு ஏ.வி.எம்.ஜாபர்தீனின் முகம் கண்ணெதிரே தோன்றி கனிமுகத்தைக் காட்டுகின்றது.

 “சீட்டுக்கவி” ஒன்றை எழுதி அந்த பாட்டுடைத் தலைவனின் பார்வைக்கு  அனுப்பி வைக்கின்றார்.

எங்கள்  நண்பர் குழாமைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் “சீட்டுக்கவி” என்றுதான் அழைப்போம். அவர் யார் யாருக்கெல்லாம் “சீட்டுகவி” எழுதியிருக்கிறார் என்று தயவுசெய்து கேட்க வேண்டாம். சதா “ரம்மி” “மூணுசீட்டு” என்று சீட்டாட்டம் ஆடிப் பொழுதை வீணடித்துக்கொண்டிருந்த  ‘டம்மி’ கவிஞரை வேறெந்த பெயர்கொண்டு அழைப்பதாம்?

“சீட்டுக்கவி” என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். முடியரசர் அல்லது வள்ளல் ஒருவருக்கு புலவர் பொருளதவி கேட்டெழுதும் விண்ணப்பத்திற்கு “சீட்டுக்கவி” என்று பெயர். இதில் கவிஞரின் சாதனையும் வள்ளலின் புகழும் பாடப்படும்.

மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் என்பவருக்கு அருணாசல கவிராயரும், எட்டயபுரம் ஜமீனுக்கு பாரதியாரும்  சீட்டுக்கவிகள் எழுதி அனுப்பிய நிகழ்வுகளை நான் படித்ததுண்டு.

கவிஞர் சாரண பாஸ்கர் எழுதி அனுப்பிய “சீட்டுக்கவி” ஜாபர்தீனின் கைகளில் கிடைக்கிறது.

 

இல்லத் துணையாளை எனக்களித்துத் துணையளித்த

செல்வத் திருக்குலமாம் அவராத்தர் செழுங்குலத்தில்

வந்துதித்த மைந்தரெல்லாம் வாழ்வுத் துணையாகத்

தந்துவிட்ட நாயனுக்கே தலைசாய்த்து, இந்நாளில்

 

பாட்டுத் திறனறியும் பண்பாட்டுப் புகழ்க் கொடியை

நாட்டும் ஜாபருத்தீன் நல்லன்புத் திருச்சமூகம்

சீட்டுக் கவியெழுதித் தீராத என்துயரை

ஓட்டத் துணிந்திட்டேன் இறையவனே உன் துணையால்!

சீட்டெழுதிப் பட்டகடன் தீராத காரணத்தால்

பாட்டெழுதிக் கடன் தீர்க்கப் பாடாய்ப் படுகின்றேன்

 

கண்ணூறும் நீரில் கவியூற மாட்டாமல்

என் ஊறு வாட்டுவதை எவ்வா றியம்பிடுவேன்?

என்னூறு தீரப்பல எண்ணூறு தேவையதில்

இந்நாளில் ஐநூறு எனக்களித்துக் கடன் தீர்க்கப்

பொன்னூறும் உன்னில்லம் புகுந்திட்டேன், எனதுஇரு

கண்ணூறும் நீர்துடைக்கக் கருணைசெய்ய வேண்டுகிறேன்!

 

இந்த சீட்டுக்கவியை கவிஞர் குறிப்பாக ஏ.வி.எம்.ஜாபர்தீனுக்கு எழுதியனுப்பிய காரணம், அவர் பாட்டுத் திறனறிபவர்;  பண்பாட்டுப் புகழ்க்கொடியை நாட்டுபவர் என்ற காரணத்தினால் என்று நாம் இப்பாடலின் வாயிலாக அறிய முடிகின்றது.

இந்த சீட்டுக்கவியை கவிஞர் குறிப்பாக ஏ.வி.எம்.ஜாபர்தீனுக்கு எழுதியனுப்பிய காரணம், அவர் பாட்டுத் திறனறிபவர்;  பண்பாட்டுப் புகழ்க்கொடியை நாட்டுபவர் என்ற காரணத்தினால் என்று நாம் இப்பாடலின் வாயிலாக அறிய முடிகின்றது.

இவர் தமிழகத்தில் மட்டுமல்லாது கீழை நாடுகளிலும் தன் புகழ்கொடியை நாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்’ பெற்றதைப்போன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் “தமிழோடு நிலைக்கப் பிறந்தவன்” என பாராட்டுப் பெற்ற ஒரு தமிழ்ப்புலவனுக்கு இப்படியொரு அவல நிலையா என்று ஜாபர்தீன் துடிதுடித்துப் போகிறார். ஈந்து சிவந்த கைகளைக் கொண்ட ஜாபர்தீனின் முகமும் வேதனையால் ‘சிவ்வென்று’ சிவந்து போகிறது.

கவிஞரின் ஊறு தீர்வதற்கு உண்மையிலேயே பலநூறு தேவைப்படுகிறது. அதில் ஐநூறு மாத்திரம் தந்தால் போதுமானது என்ற கவிஞரின் ‘போதுமென்ற மனம்’ ஜாபர்தீனின்  இதயத்தைத் தொடுகிறது. அவர் கேட்டதைவிட அதிகமான தொகையினையே ஈந்து ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைந்து’ இன்புறுகிறார்.

 “காயாத புல்லர் இருந்தென்ன போயென்ன? எட்டிமரம் காயாதிருந்தென்ன? காய்த்துப் பலனென்ன?” என்ற பாடல் நமக்குத் தெரியும். கைவிரித்துப் போய் உதவி என்று கேட்பவருக்கு கை விரிப்பவரா இந்த உத்தமர்?

 “வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து” என்ற உட்பொருளை அறிந்தவர் ஜாபர்தீன்.

கவிஞர் சாரணபாஸ்கரனும் ஏ.வி.எம்.ஜாபர்தீனும் ஒரே ஊர்க்காரர்கள் என்பது மட்டுமல்ல. கவிஞருக்கு தமிழ்ப் பயிற்றுவித்து ஆளாக்கிய ஆசிரியர் வரகவி ஸாது ஆத்தனார் என்பவர் ஏ.வி.எம்.ஜாபர்தீனின் குடும்பத்தை சேர்ந்தவர்.

ஜாபர்தீனுக்கு இயற்கையிலேயே தமிழார்வம் மற்றும் இலக்கியத் தாக்கம் சற்று மிகையாகவே இருந்தது. ஏ.வி.எம். ஜாபர்தீனின் இளவல் முனைவர் ஏ.வி.எம்.நஸீமுத்தீனும் ஒரு கவிஞர்தான். கவிஞர் சாரணபாஸ்கரன் வாயாலேயே  “கணிதப்புலவர்” என புகழப்பட்டவர் இவர். கிரேக்க இதிகாசக் கதைகளை தமிழுக்கு கொண்டு வந்தவர்.

“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றும் “வெரை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா காய்க்கும்?” என்றும் முதுமொழிகள் சொல்கிறார்களே,  அது பொய்யல்ல என்பதை நான் உணர்ந்தேன்.

அண்ணனுக்கு தம்பி சளைத்தவரல்ல. என் சொந்த ஊர் நாகூரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் இருவருமே மறைமுகமாக செய்த உபகாரம் இஸ்லாமிய இலக்கியத்திற்கு ஓர் ஆவணம்.

“ஏ.வி.எம் ஜாபர்தீன்- நூர்ஜஹான்” அறக்கட்டளையின் சார்பாக  நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் எழுதிய “இனிக்கும் இராஜநாயகம்” நூலைப் பதிப்பித்தது ஜாபர்தீன் என்றால்,  அண்மையில் நாகூர் குலாம் காதிறு நாவலரைப்பற்றிய விரிவான நூலெழுதி ‘சாகித்திய அகாதெமி’ வாயிலாக வெளியிட்டு நாகூர் படைப்பாளிகளை பெருமை படுத்திய சாதனை ஏ.வி.எம்.நசீமுத்தீனைச் சாரும்.

அறிஞர் எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் முதற்கொண்டு எழுத்தாளர் சுஜாதாவரை இலக்கியவாதிகள் அத்தனை பேருடனும் சுமூகமான உறவு கொண்டிருந்தவர்.ஜாபர்தீன்.

1993-ஆம் ஆண்டு, ஏ.வி.எம்.ஜாபர்தீன் கோலாலம்பூரில் இருந்த சமயம், ஒரு மாலை வேளையில் அவரது தொலைபேசி  மணி ஒலிக்கிறது.

“ஜாபர்தீன்! நான் உங்க ஊருக்கு வந்திருக்கிறேன்”

என்ற பழக்கப்பட்ட குரலைக் கேட்டதும் அழைத்தவர் தன் நெடுங்கால நண்பர் எழுத்தாளர் சுஜாதா என்பதை புரிந்துக் கொள்கிறார் அவர்.

உடனே அவர்களின் இருப்பிடத்திற்குச் சென்று வரவேற்று சுஜாதா, அவரது துணைவி சுஜாதா  ரங்கராஜன், அவருடைய மாமனார், மாமியார் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஒரு சைவ உணவு விடுதிக்குச் செல்லத் தயாராகிறார்.

“எங்கள் வீட்டிற்கு அழைக்கலாம் என்றிருந்தேன். ஆனால் அங்கு நீங்கள் உணவருந்த மாட்டீர்களே?” என்கிறார்.. “யார் சொன்னது? நீங்கள் கூப்பிடவில்லை என்ற குறைதான். எங்களுக்கு. சைவ சாப்பாடு தாருங்கள். நாங்கள் வரத்தயார்” என்று எல்லோரும் ஒருமித்த தொனியில் கூறுகிறார்கள்.

அவசர அவசரமாக ஜாபர்தீன் தன் மனைவிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அத்தனை பேருக்கும் உடனடியாக சைவ உணவு தயார் செய்ய உத்தரவிடுகிறார்.

சுஜாதா குடும்பத்தினர் அவர் விட்டுக்குச் சென்றபோது விதவிதமான சைவ உணவுகள் தயார் செய்து சாப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டுள்லது.  அனைவரும் வயிறார விருந்துண்டபின்,  அவரது காரையும் ஓட்டுனரையும் தந்து அவர்கள் கோலாலம்பூரில் தங்கியிருக்கும் வரை ஊரைச் சுற்றிப்பார்க்க அத்தனை ஏற்பாடுகளையும் செய்கிறார். ஆச்சாரமான அய்யங்கார் குடும்பம் பாகுபாடின்றி தன் வீட்டில் உணவருந்தி மகிழ்ந்தது அவருக்கு மனநிறைவைத் தருகிறது.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

 நல்விருந்து ஓம்புவான் இல்

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப விட்டுக்கு வரும் விருந்தினர்களை

முகமலர்ச்சியுடன் தலைவன் வரவேற்க, அவனது இல்லத்தரசியோ வீட்டுக்குள் இருந்தவாறு உள்ளக் களிப்புடன்  உணவு பரிமாற, அந்த விருந்தோம்பலினால் கிடைக்கும் மட்டற்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது?

2003-ஆம் ஆண்டு தினமணி ரம்ஜான் மலரில் சுஜாதா இதுபோன்று எழுதுகிறார் :

திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்றுகுர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டாஎன்றார்நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘The Meaning of the Glorious Quran” என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன்.

 சில நாட்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.

 வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக் கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!’ என்று வியந்தோம். அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற  நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன்.”

என்று இஸ்லாத்தின் புரிதலுக்கு தன் நண்பர் ஜாபர்தீனின் தூண்டுதலை கோடிட்டுக் காட்டுகிறார் சுஜாதா.

ஜாபர்தீன் அமைதியின்றி ஆர்ப்பாட்டமின்றி புரிந்துவந்த இஸ்லாமிய தஃவா பணி நம் மனதைக் குளிர வைக்கிறது.

என் தாய்வழி பாட்டனார் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி வணிகத் துறைக்கு “ஹாட்டின் ப்ளாக்” என்ர கட்டிடத்தை கட்டிக்கொடுத்ததைப் போன்று ஏ.வி.எம்.ஜாபர்தீனும் அந்த பெருமைமிகு கல்வி நிறுவனத்திற்கு கட்டிடம் ஒன்றை கட்டித் தந்துள்ளார்.

 “செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி” என்பார்கள். ஆம்.இவரும் செத்தும் கொடை கொடுத்த செம்மல்தான். “சீனம் சென்றேனும் ஞானம் தேடுக” என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனிதவாக்கு.

ஈகையிலேயே சிறந்த ஈகை கல்விக்கண்களைத் திறந்து வைப்பதுதான். ஒரு சமுதாயமே வாழையடி வாழையாக பயன்பெறும் நோக்கில் புரிகின்ற இவ்வித ஈகையானது “சதக்கத்துல் ஜாரியா” என்ற வகையைச் சார்ந்தது. அந்த கல்வியானால் பயன்பெறும் தலைமுறைகள் தழைக்கும் காலம்வரை அதன் பயனும் நன்மையும் அந்த கொடையாளியின் நன்மை பக்கங்களில் வரவாகிக் கொண்டே இருக்கும்.

வள்ளுவன் சொன்ன”வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்” பட்டியலில் ஏ.வி.எம்.ஜாபர்தீனின்  பெயரும் காலத்தால் அழியாத காவியமாய் இடம் பெற்றுள்ளது என்பதில் சற்றும் ஐயமில்லை.

– நாகூர் அப்துல் கையூம்

image

ஏ.வி.எம்.ஜாபர்தீன் அவர்களின் திருமணத்தின் போது எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் மற்றும் கவிஞர் சாரணபஸ்கரன்

 

கவிஞரின் சமயோசிதம்

”சென்னை மெமோரியல் மண்டபத்தில் அன்றொரு நாள் பா.தாவூத் ஷா அவர்களுக்கும் பாபநாசம் சிவன் அவர்களுக்கும் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயமும் பொன்னாடையும் வழங்கிப் போற்றிய நிகழ்ச்சியில் நம் கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் அவர்கள் இப்போது தான் முதலாக ஒரு தமிழ் எழுத்தாளரைப் பாராட்டுகிறீர்கள் என்றாராம்.

பத்தாண்டுகளாக பல்வேறு எழுத்தாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்து வந்த அவ்விழாக் குழுவினருக்கு கவிஞரின் கூற்று பெருவியப்பாக இருந்தது. கவிஞர் விளக்கினார்:

“எழுத்தை ஆளுகின்றவன் தானே எழுத்தாளன்? இதுவரையில் உங்களால் பரிசும் பாராட்டும் பெற்றவர்கள் எழுத்தால் ஆளப்பட்டவர்கள். இவர் ஒருவரேதான் எழுத்தை ஆண்டவர்”

“இலக்கிய இதழியல் முன்னோடிகள்” என்ற தலைப்பில் “சமநிலைச் சமுதாயம்” இதழில் ஜே.எம். சாலி அவர்கள்.

 

மு. மு. இஸ்மாயீல் அணிந்துரை

[கவிஞர் சாரணபாஸ்கரன் அவர்களுடைய “யூசுப்-ஜுலைகா”
காப்பியத்திற்கு வழங்கிய அணிந்துரை]

 

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு மு. மு. இஸ்மாயீல் அவர்கள் மூன்றாம் பதிப்பிற்கு வழங்கிய அணிந்துரை

இந்தக் காப்பியம் காதற் காப்பியமே என்றாலும் இது ஒரு கற்பனைக் காப்பியம் அன்று. யூசுப்-சுலைகா என்ற இருவரையும் பற்றி, திருக்குர் ஆனும் கூறுகிறது. விவிலியமும் கூறுகிறது. இப்படிக் கூறப்படுவதன் காரணமாக, இது இறைவனே எடுத்துக்கூறும் சரித்திர நிகழ்ச்சியாக அமைந்து, மக்கள் அனைவர்க்கும் படிப்பினைகள் தரும் சரித்திரச் சான்றாகவே ஆகிவிடுகிறது.

இஸ்லாமிய வரலாற்றின்படி யூசுபும், அவரது தந்தை யாகூபும் நபியாவார்கள். யாகூப் அவர்களின் இளைய தாரமாகிய ராஹிலாவின் வயிற்றில் மகனாகப் பிறந்தவர் யூசுப். அழகே உருவெடுத்து வந்தது போன்ற தோற்றமுடைய ஆணழகர். அவரது அன்னை ராஹிலா சிறிது காலத்திலேயே இறந்து விடுகிறார். தமது ஏனைய புதல்வர்களை விடவும் யூசுபிடம் தனியன்பு கொள்ளுகிறார் யாகூப். இதனால் யாகூப் நபியின் மற்ற தாரத்தின் புதல்வர்கள் யூசுபையே தந்தையிடமிருந்து பிரித்துவிடத் திட்டமிட்டு தந்திரமாகத் தங்களுடன் யூசுபை வனத்திற்கு அழைத்துச் சென்று, பாழடைந்த ஆழ்கிணற்றில் தள்ளிவிட்டு, யூசுபை ஓநாய் அடித்துத் தின்றுவிட்டதாகத் தந்தையிடம் பொய்யுரைக்கின்றனர்.

கிணற்றிலே தள்ளப்பட்ட யூசுப், அவ்வழியே சென்று கொண்டிருந்த வணிகர்களால் மீட்கப்படுகிறார். அவரது அழகைக் கண்டு அதிசயித்து நின்ற வணிகர்களால் யூசுபை என்ன செய்வதென்றே தெரியாமல், அவரையும் வியாபாரப் பொருளாக்கி, அக்கூட்டத்தின் தலைவரான மாலிக்கினிடமே விற்று விடுகின்றனர்.

மன்னர் தைமூஸின் திருமகள் சுலைகா, அழகுப் பெட்டகமாய் வளர்ந்து வருகிறாள். ஒரு நாள் அவள் ஒரு ஆணழ கனைக் கனவிலே கண்டு அவனிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விடுகிறாள். அவள் சந்தித்தவனைக் கண்டுபிடித்து அவனிடம் சுலைகாவை ஒப்படைக்க சுயம்வரம் நடத்திப் பார்க்கின்றனர். இங்கேயும் தான் கனவிலே கண்ட ஆணழகனைக் காணாமல் ஏமாற்றமடைகிறாள் சுலைகா. அவளது உணர்வு கலங்குகிறது. இங்கே நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார் கவிஞர்.

இரவு பகல் எந்நேரமும் தன்னுடனிருக்கும் தோழிகளாலும், அரசு நடத்தும் அமைச்சர்களாலும், படைநடத்தும் வீரத் தளபதிகளாலும் தன்னைச் சீராட்டி வளர்த்த அருமைத் தந்தையினாலும் தன் கனவுக்காதலனைக் கொண்டுவந்து தன்னுடன் சேர்க்க இயலாமையை எண்ணி எண்ணி ஏங்கிய சுலைகா, இறுதியாக இறைவனிடமே தன் துன்பத்தை முறையிடுகிறாள். இப்போது சுலைகா ஏமாறவில்லை; அந்த ஆணழகர் அவளைத் தேடி வருகிறார். வந்தவரை விடவில்லை சுலைகா. இறைவன் மீது ஆணையிட்டு, அவரது இருப்பிடம் பெயரை வினவுகிறாள்.

செங்கடலின் மத்தியிலோ, கருங்கடலின்
முனையினிலோ தீக்கொழுந்து
பொங்குகின்ற பாலையிலோ பனி உறையும்
பாறையிலோ புலியும் சிங்கம்
தங்குகின்ற காட்டினிலோ எங்கே நீர்
இருக்கின்றீர்? சாற்று வீரேல்
அங்குடனே வந்திடுவேன். அது நரகே
என்றாலும் அன்போ டேற்பேன்!”

என்கிறாள். செங்கடலின் பேரலைகள் முத்தமிட்டு மகிழுகின்ற மிசுரு நாட்டின் முதலமைச்சன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான் அந்த ஆணழகன். இத்தனையும் கனவில்தான். ஆனால் அவள் இந்தச் சந்திப்பை வெறும் கனவாக நினைக்கவில்லை. உண்மையான சந்திப்பாகக் கருதித் தன்னை மிசுரின் முதலமைச்சருக்குத் திருமணம் செய்விக்கும்படி தந்தைக்குச் செய்தியனுப்புகிறாள்.

மிசுரு நாட்டின் முதலமைச்சரான அஜீஸுக்கு இத்தகவலை அனுப்பி, தன் அழகுத் திருமகளை மணந்து கொள்ள தன்னாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார் மன்னர் தைமூஸ். மன்னரின் விருப்பத்தை அஜீஸால் மறுக்க முடியவில்லை. மணப்பதற்குச் சம்மதந்தான். ஆனால் என் நாட்டிலிருக்கும் கடமையின் காரணமாக அங்கு வர முடியவில்லை என்றும், திருமணத்தை முடித்துப் பெண்ணை அனுப்பிவைத்தால் தான்ஏற்றுக் கொள்வதாகவும் அஜீஸ் கூறிவிடுகிறார். இதன்படியே சுலைகாவின் திருமணச் சடங்குகளைத் தன்நாட்டிலேயே முடித்து, மகளைக் கணவனின் நாட்டிற்கு அனுப்பிவைக்கிறார் தைமூஸ். ஆனால், தன்னை மணந்து கொண்ட மிசுரின் முதலமைச்சர் ஆஜீஸ், தனது கனவில் தோன்றிய ஆணழகரல்லர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள் சுலைகா. அவளது ஏமாற்றத்தை அறிந்து அவளது உணர்ச்சியை மதித்து ஒதுங்கிவாழ்கிறார் அஜீஸ். தன் கனவுக்காதலனல்லாமல், காற்றும் தன்னைத் தீண்டக்கூடாதென்று வாழ்கிறாள் சுலைகா. அவள் விருப்பப்படியே வாழ்வதற்கான அத்தனை வசதிகளையும் செய்து தருகிறார் அமைச்சர் அஜீஸ்.

அழகர் யூசுபை கிணற்றிலிருந்து மீட்டு, அடிமை கொண்ட வணிகர், தம் பொருள்களை விற்கவும், புதிய பொருள்களை வாங்கவும் பல நாடு நகரங்களைக் கடந்து இறுதியில் மிசுருக்கே வருகின்றனர். அவரது அழகைக் காணுவதற்கு ஆண்களும் பெண்களும் அணியணியாகத் திரண்டு வந்து, காட்சிப் பொருளைக் காணுவதற்குக் கட்டணம் கொடுப்பது போல, யூசுபின் அழகைக் கண்டுகளிக்கக் கட்டணம் கொடுக்கின்றனர். அவரது அழகைக் காணுவதற்கே கூட்டங் கூட்டமாக வரும் மக்களிடையே, அவரையே அடிமையாக விற்று அதிகப் பணம் பெற வணிகர் தலைவன் மாலிக் முயற்சி செய்கிறான்.

யூசுபின் அழகின் சிறப்பு நகரெங்கும் பரவி அஜீஸின் இல்லத்திற்கும் எட்டுகிறது. அவரை அடிமையாகப் பெறு வதையே பெருமையாக நினைத்த அமைச்சர் அஜீஸ், ஏலமிடப்பட்ட யூசுபைத் தன் அரண்மனைக்கே கொண்டுவரச் செய்கிறார். அவரது பேரழகைத் தோழிகள் மூலம் அறிந்த சுலைகா அவரைக்கண்டு, அவரேதான் கனவுக்காதலர் என்பதையறிந்து அவர் எடைக்கு இரட்டிப்புப் பொன் கொடுத்து யூசுபை அடிமையாகப் பெறுகிறாள் சுலைகா. தன்கனவுக் காதலன் தனது அரண்மனைக்கே வந்துவிட்ட பிறகு அவரையடையத் துடிக்கிறாள் சுலைகா.

அன்றிரவு அவர் அயர்ந்து தூங்குகிறார். அவளால் தூங்கவே முடியவில்லை. பின்னிரவு அவள் யூசுபை நெருங்குகிறாள். அவளது அருமைத் தோழியும் அவளறியாமலேயே இருளிலே மறைந்து மறைந்து பின் தொடருகிறாள். இளவரசியின் எண்ணம் அந்தத் தோழிக்குப் புரிந்துவிடுகிறது. பெண்மைக்கே பெருமை தரும் அவளது கற்பைப் பாதுகாக்கவே தோழி தொடர்ந்து கண்காணிக்கிறாள்.

எலிபிடிக்கப் பதுங்குகின்ற பூனை போன்று
இருளிடுக்கில் பதுங்கிநின்ற தோழி நெஞ்சில்
கிலிபிடிக்க இளவரசி கரம் பிடித்துக்
கீர்த்திமிகும் பெண்ணுடைமை யாகும் கற்பைப்
பலிகொடுக்கத் துணிந்த செயல் தடுத்து…”

நிற்கிறாள், ‘அடிமையின் அழகிலே மனமே வைத்து அரசகுலப் பெருமைக்கே அழிவு’ தேடவேண்டாமென்று தோழி எடுத்துக் கூறுகிறாள். ‘அடிமையெனக் கருதினையோ? கனவில் தோன்றி அடிமை கொண்ட என்னரசர் இவரேயாவார்.’ என்பதைத் தோழிக்குத் தெரிவிக்கும் சுலைகா;அவரைத் தன்னிடம் அழைத்து வரும்படியும் பணிக்கிறாள்.இந்த அழகரே இளவரசியின் கனவுக்காதலனென்பதையறிந்து மகிழ்ந்த தோழி,அவளது கற்பைக் காக்கும் கடமையில் தவற மறுக்கிறாள்.

ஒருநாள் யாருமே இல்லாத சமயத்தில் யூசுபைப் பலவந்தமாக அடைய முயற்சி செய்கிறாள் சுலைகா. இச்சமயத்தில் அங்கே அஜீஸ் வந்து விடுகிறார். தன்னை யூசுப் பலவந்தம் செய்ததாகக் குற்றம் சாட்டுகிறாள். ஆனால் உண்மையை அமைச்சர் அஜீஸ் உணருகிறார் என்றாலும், இதைக் காரணமாக வைத்து சுலைகாவையும் யூசுபையும் பிரித்து வைக்கத் திட்டமிட்டு யூசுபைச் சிறைப்படுத்துகிறார். அங்கேயும் தொடர்ந்து சென்று முயற்சி செய்கிறாள் சுலைகா. ஆனால் யூசுப் அவள் முயற்சிக்கு இணங்கவில்லை. ‘சிறைபட்டு வாழ்ந்தாலும் வாழ்வேன், கறைபட்டோ குறைபட்டோ வாழமாட்டேன்’ என்று சத்தியத்தின் பால் உறுதியாக நின்று தவறிழைக்க மறுக்கிறார் யூசுப்.

மிசுரின் மன்னர் கண்ட ஒரு பயங்கரக் கனவுக்குப் பலன்கூறும் காரணத்தால், சிறையிலிருந்து விடுதலை பெற்ற யூசுப், சிறைப்படுவதற்கான எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது நிரூபணமாகி அந்த நாட்டின் உணவு அமைச்சராகவும் முதலமைச்சர் அஜீஸின் மரணத்திற்குப்பின், முதலமைச்சராயும் ஆகிறார். அஜீஸின் மரணத்தால் விதவையாகிவிட்ட சுலைகாவை யூசுபுக்கே மணமுடித்து வைக்கிறார் மன்னர். இதுதான் யூசுப் – சுலைகாவின் கதையாகும்.

இதனை இனியதொரு தமிழ்க் காப்பியமாக ஆக்கித் தந்திருக்கிறார் கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனார். அவர் நாடறிந்த நல்ல கவிஞராவார். அவரது இந்தக் காப்பியம் முழுவதிலும் அவரது கவித்திறன் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. ஆண்டிருக்கும் சொற்கள் மிக எளியவை. நடைமிகத் தெளிவாக, சரளமாக, ஆற்றொழுக்குப் போல் அமைந்திருக்கிறது. எந்த ஒரு சொல்லின் பொருளையும் தெரிந்து கொள்ள அகராதியைப் புரட்டத் தேவையே இல்லை. அத்தகைய எளிய சொற்களால், மிக ஆழ்ந்த உணர்ச்சிகளையும் மிகத் தெளிவாய்ச் சித்திரித்துக் காட்டிவிடுகிறார் கவிஞர்.

கவிஞர் மேற்கொண்ட இந்தப்பணி, மிகவும் கடினமானது. திருமறை கூறும் இக்கதையின் நிகழ்ச்சிகளுக்குக் காப்பியவடிவம் கொடுத்தாக வேண்டும். இது ஒரு கூரிய கத்தியின் மேல் நடப்பது போன்றது. இந்தச் சாதனையைக் கவிஞர் மிக வெற்றிகரமாய்ச் செய்து முடித்திருக்கிறார். பாத்திரங்களின் பண்புகளையும், அவர்களிடையே நடைபெறும் உரையாடல்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் கவிஞர் தம் திறமை முழுவதையும் காட்டியிருக்கிறார். அதே சமயத்தில் யூசுப் ஒரு நபி என்பதையும், சுலைகா அந்த நபிக்கு மனைவியாகப் போகிறவளென்பதையும் கவிஞர் மறந்து விடவில்லை.

இந்தக் காப்பியத்தினூடே கவிஞர் பல அரும்பெருங் கருத்துக்களையும் வெளிப்படுத்துகின்றார். யூசுப் சிறுவனாக இருக்கும் போது இறைவனின் தன்மையை

சூழும் இருளும் விரைந்தோடும்
சூரியன் மீண்டும் ஒளி காட்டும்
வாழும் உயிர்கள் அத்தனையும்
வாய்ப்புக் கேற்ப வாழ்ந்திடவே
தாழ்வும் வாழ்வும் சமமாக்கித்
தந்தான் இறைவன்”

என்று பாடுகிறார் கவிஞர்.

ஒருவர் ஆழ்ந்த துயரத்திலிருக்கும் போது அவருக்குப் பொழுது நீண்டு கொண்டே இருப்பதாகவும், அது மெள்ளமெள்ள நகர்ந்து கொண்டே போவதாயும் தோன்றுவது மனித அனுபவம். இந்த அனுபவத்திற்கு ஒரு உருவகம் கொடுத்து, இரவு முழுவதும் சுலைகா துயரிலே துவண்டு கொண்டிருப்பதைச் சொல்லும் போது –

சோர்ந்து கிடக்கும் சுலைகாவின்
துயரம் காணச் சகியாமல்
ஊர்ந்து சென்றனள் இரவுத்தாய்’

என்று சுட்டிக் காட்டுகிறார் கவிஞர். சுலைகா தன் கனவிலே தோன்றிய ஆணழகருடன் பேசுகின்ற பேச்சையும், தன் உணர்ச்சிகளை அவள் வெளிப்படுத்துவதையும் கவிஞர் பல அருமையான பாடல்களின் மூலம் வடித்துத் தருகிறார். ‘பெண்ணுக்குப் பிழை செய்த பெரும் பாவம்

தனை எண்ணிப் பேச்ச டைத்துக்
கண்ணுக்கு விருந்தாக நிற்கின்ற
தெதற்காக……?’ -என்றும்

என்றைக்கு நின் விழியில் பட்டேனோ
அன்றைக்கே எனையழித்துச்
சென்றிட்ட நீ எதற்கே இன்றைக்கு
என்னில்லம் திரும்ப வேண்டும்?’

என்றும் ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் கேட்கும் சுலைகா, தான் எப்படி இருந்தவள் எப்படியாகி விட்டேன் என்பதை விளக்கிக் கூறுகையில்:

மணங்கவரும் ரோஜாவாய் மணந்த எனை
ஏக்கத்தால் மஞ்சள் பூத்தப்
பிணமாக்கிப் பூவரசம் பூவாக்கும்
ஆசைநோய் பிடிக்கச் செய்து
குணமாக்கும் அருமருந்தும் கொண்டோடி
மறைந்திட்ட கூற்றுவா!…” என்றழைக்கிறார்.
ஒரு பெண் எத்துணை அழகுடையவளாயினும்-என்னதான் அந்தஸ்துடையவளாயினும் ஒரு ஆணின் கைப்பிடிக்கும்போதுதான் அவள் பெருமை சிறக்கும் என்பதை

பிறந்திடும் கொடியி லிருந்திடும் மலர்கள்
பெருமையே பெற்றிடா துதிரும்
பிறந்திடும் மனையி லிருந்திடும் பெண்ணும்
பிறவியின் பெருமையை இழப்பாள்
பிறப்பிட மன்றி புகுமிடம் சிறப்புப்
பெற்றிடும் மலர்களே பெண்கள்!…” –

என்று எவ்வளவு ஆழகாக எடுத்துக் காட்டி விடுகிறார் கவிஞர்.

வாதத் திறமையினால் தம் கட்சியை நிலை நிறுத்த முயலும்தேர்ந்த வழக்கறிஞர்களைப் போல யூசுபும்-சுலைகாவும் வாதிடும் பாடல்களைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டிய அளவிற்குச் சுவையாகவும் சிறப்பாகவும் எழுதி இருக்கிறார் கவிஞர்.

என்னிதயச் சோலையினில் தாம்விதைத்த
காதல்விதைக் கேற்ற வண்ணம்
என்னுணர்வுக் குருதியினைத் தண்ணீராய்ப்
பாய்ச்சிவளர்த் தின்ப முற்றேன்:
உன்னுடைய காதல்விதை உயர்கனிகள்
தருமரமாய் ஓங்கி, என்றன்
மென்னுடலில் நரம்பாக வேரோடி
விட்ட பின்னே வெட்டப் போமா?”

என்று வினவுகிறாள் சுலைகா.

வாய்மையெனும் மாளிகையின் மதிலுடைக்கப்
பெருமரமே வளரக் கண்டால்,
தூய்மையெனும் கோடரியால் பிளந்தெறிவர்
மாளிகையின் சொந்தக் காரர்!
தாய்மையெனும் அரும்பதவி தாங்குகின்ற
பெண்குலமே தவறு மாயின்,
மாய்ந்தொழியும் மனிதநெறி அதற்குதவும்
ஆடவரும் மிருக மாவார்!’

என்று மிக அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும், கம்பீரமாகவும் யூசுப் பதில் கூறுவதாகப் பாடுகிறார் கவிஞர்.

நேர்மை நின்று தவறாத யூசுப், என்ற முறையில் அவர் உருவாக்க நினைத்த சமுதாயம் எத்தகையது என்பதையும் கவிஞர் ஆங்காங்கே சுட்டிக் காட்டுகிறார்.

தனியொருவர் தவறிழைப்பின் அவர்குலத்தை,
சந்ததியைச் சார்ந்தவரைச் சமுதாயத்தின்
தனிப்பெருமை அனைத்தையுமே தகர்ப்பதே போல்…

என்பது எத்தகைய நடைமுறை உண்மை! இத்தகைய கருத்துச் செறிவும், கவிதை நயமும் காப்பியம் முழுவதும் மண்டிக் கிடக்கின்றன. சொல்லின் எளிமையும், நடையின் சரளமும், உணர்ச்சியின் ஆழமும், கதையின் சுவையும் நூலைக் கையில் எடுத்தவரை அதை முடிக்காமல் கீழே வைக்க அனுமதிக்க மாட்டா. இத்தகைய சிறந்த காப்பியம் 1957ஆம் ஆண்டில் முதன்முறையாக வெளிவந்தபிறகு அதன் மூன்றாம் பதிப்பு வெளியாவதற்கு இருபது ஆண்டுகள் செல்ல வேண்டியிருந்தது என்பது ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் கொடுப்பதாகும்.

யூசுப்-சுலைகா என்ற பெயரைப் பார்த்து விட்டு ஏதோ இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது என யாரும் எண்ணிவிடக் கூடாது.

இது மொழியால் தமிழ்க் காப்பியம்,
உணர்ச்சியினால் காதற் காப்பியம்,
பண்பினால் மனிதக் காப்பியம்,
போதிக்கும் அறத்தினால் அமர காவியம்.

இத்தகையக் காப்பியத்தை ஆக்கித்தந்த கவிஞர் திலகம்சாரணபாஸ்கரனாருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, சிறப்பு மிகு இத்தகையக் காப்பியங்கள் இன்னும் பல செய்வதற்கான எல்லா நலன்களையும் அவருக்குத் தந்தருளுமாறு இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மு. மு. இஸ்மாயீல் அணிந்துரை
மயிலாப்பூர்
சென்னை
27-3-1976

தினகரன் வாரமஞ்சரி

தினகரன் வாரமஞ்சரி

‘படித்தேன்!’

தமிழ்நாடு தமிழ்ப் புலவர் மன்ற ஸ்தாபகரும் அரசின் தமிழ் வளர்ச்சிக் கழக – ஆராய்ச்சிக்குழு உறுப்பினருமான முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எழுதியது

அறிஞர் பாரதிதாசன் கவிதைகளை முன்பொரு முறை படித்தேன். இன்று படித்த அன்பர் சாரண பாஸ்கரன் கவிதைகள் எந்த விதத்திலும் அதற்குக் குறைந்ததல்ல என அறிந்தேன். ‘யூசுப் சுலைகா’ என்ற நூலை நான் படித்தேன். ஆம்! அது படித் தேன். கதைக்காக ஒரு முறை, கவிதைக்காக ஒருமுறை; கருத்துக்காக ஒருமுறை; கற்பனைக்காக ஒருமுறை; உவமைக்காக ஒருமுறை படித்தேன். அது ஒவ்வொரு முறையும் ‘படித் தேன்’ என ருசித்தது. தமிழக மக்கள் இவ் உயர்ந்த காவியத்தைப் படித்துப் பயனடைய வேண்டும் என விரும்புகின்றேன்.

திருச்சி 8
தி. வ. ஆண்டு 1992
பங்குனி 19
தங்களன்பிற்குரிய
கி. ஆ. பெ. வ

 

புகழ் மாலை

என்னிலே உணர்வை ஆக்குவிக்கும்
எல்லை யில்லா அருட்கடவுள்
தன்னுடைத் துணையாய்த் துவங்குவதாய்ச்
சாற்றிய காப்பின் விளைவிதுவோ?
தன்னுடைத் தூதர் காவியத்தைத்
தானே எழுதித் தந்தனனோ?
என்னவென் றிதையே இயம்பிடுவோம்?
எல்லாப் புகழும் இறைவனுக்கே!

பதியாம் அல்லாஹ் வின் தூதாய்ப்
பதியாம் கன் ஆன் பூபதியாய்ப்
பதியாம் யாக்கூ பின்மகவாய்ப்
பார்புகழ் மிஸ்ரு அதிபதியின்
பதிசேர் மதிசேர் அமைச்சாகிப்
படியில் தைமூஸ் திருமகளார
பதிவிர தாசிரோன் மணியுடைய
பதியாய்ப் போந்த பெருமானார்,

ஆரணம் போற்றும் அழகுருவார்
அன்பே வடிவாம் திருவுருவார்
காரணச் சரிதம் தீந்தமிழின்
கனக முடியின் பெருமணியாய்ப்
பூரண மாகச் செய்வித்துப்
பொன்றாப் புகழைப் பூண்டனனே!
சாரண பாஸ்கரன் அஹ்மதெனும்
சம்பன்ன யோக நாவலனே.

வாழி அவன் தன் நற்பெயரும்
வளர்மதி போன்று வளர்ந்தோங்க
வான்தன் காப்பியமும்
வன்மை நிலைபெற் றுயர்ந்தோங்கி!
வாழி அவன்தன் கோத்திரமும்
வளம்பல கெழுமி மிளிர்ந்தோங்கி
வாழி வான்பூ உள்ளவரை
வான்புகழ் ஓங்கி வாழியவே.

சென்னை
1-1-57
M.R.M. அப்துற் றஹீம்