கவிஞர் சாரண பாஸ்கரன் – அரிய புகைப்படங்கள்

IMG-4766

IMG-4768 IMG-4767

Sarana 1

Sarana 5

image

சாரண பாஸ்கரன்

sarana-bhaskaran-new-new1

sarana 6

sarana-bhaskaran

தமிழக முஸ்லிம் சமுதாய சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்று நிற்பவர்களில் ஒருவர் கூத்தாநல்லூர் தந்த கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் அவர்கள். அவரின் இயற்பெயர் டி.எம்.எம். அஹமது என்பதாகும். கவிதா மண்டலத்தில் சாரண பாஸ்கரன் என்னும் பெயர் ஒளிசிந்தும் நட்சத்திரம் போல் இன்றைக்கும ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அவர் எழுதிய யூசுப் – ஜுலைகா காவியம் இறவா இலக்கியங்களில் ஏற்றமுள்ளதாக என்றும் இலங்கும் படைப்பாகும்.

டிசம்பர் 11-ல் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டையொட்டி கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் கவிதைகளையும் மற்றுமுள்ள அவரின் சொல்லோவியங் களையும் நாட்டுடைமையாக்கி, அவரின் நலிந்த குடும்பத்துக்கு நன்மை செய்யும்படி தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடத்தில் கோரிக்கை வைத்தோம். மாண்புமிகு துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி, கவிஞரின் நூற்களை நாட்டுடைமை ஆக்குவதற்குரிய ஆயத்தங்கள் செய்யும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர் என்னும் நற்செய்தி கிடைத்திருக்கிறது.

டிசம்பர் முஸ்லிம் லீக் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு `நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்’விருது வழங்கிச் சிறப்பிக்க உள்ளோம். `கல்லகுடி கொண்ட கருணாநிதி வாழ்கவே – உன் உள்ளம் குடி கொண்ட உண்மை தலைவன் வாழ்கவே! ’’ என்னும் கழகப் பாடலை எழுதியவர் சாரண பாஸ்கரன்தான். இப்பாடலை இசைமுரசு நாடு முழுவதிலும் பாடியுள்ளார்; பல லட்சம் பேர் உள்ளத்தில் இப்பாடலை இடம் பெறச் செய்துள்ளார்.

இதே கவிஞர்தான் இதையும் எழுதினார்:

நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
செல்லுங்கள் துணிந்து செல்லுங்கள்
வெல்லுங்கள் பகைமை வெல்லுங்கள்
சொல்லுங்கள் தக்பீர் சொல்லுங்கள்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்
முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்!

– இந்தப் பாடலை நாகூர் ஹனீபா அவர்கள் பாடும்போதெல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள், நாரே தக்பீர் என்றதும் `அல்லாஹு அக்பர்’ என்று முழக்கமிடுவதை மண்ணும் கேட்டிருக்கிறது! விண்ணும் கேட்டிருக்கிறது.

அந்த அற்புதப் பாடலில் வரும் பின்வரும் வரிகளையும் படித்துப் பாருங்கள். மாநாட்டுக்கு வருகை தரத் துடித்து எழுவீர்கள்.

“அல்லாஹ்வைத் தவிர யார்க்கும்
அஞ்சிடாத சிங்கங்காள்
அண்ணல் நபி வழியில்
அணிவகுத்து நில்லுங்கள்
நல்லவர்க்குக் கைகொடுத்து
நன்மைசெய முந்துங்கள்
நடுவில் வந்த தூக்கம் நீக்கி
நெஞ்சுயர்த்தி நில்லுங்கள்!’’

நெஞ்சுயர்த்தி நிற்பதையும் அணிஅணியாய்ச் செல்வதையும் அல்லாஹ் பெரியவன் என்று சொல்வதையும் காணப் போகிறோம்! மாலையில் நடக்கும் பிறைக்கொடி பேரணி மூன்று மணிக்கு வேளச்சேரி நெடுஞ்சாலை காமராசர்புரம் அண்ணா விளையாட்டுத் திடலில் தொடங்கி ஐந்து மணியள வில் தாம்பரம் ரயில்வே மைதானத்தில் லட்சக்கணக்கில் நுழையப் போகிறோம்!
இரவு பகல் பாராது உழைத்து உழைத்தே
இணையற்ற சாதனையில் வெற்றிகண்டே
உறவு முறை பாராது உண்மை பார்க்கும்
ஒப்பரிய காயிதெ மில்லத் வாழ்க

– என்று கவிஞர் திலகம் பாடினார்! அந்தத் தலைவர் பெயரால் – கண்ணியத் தென்றல் காயிதெமில்லத் பெயரால் எழுந்து நிற்கும் நுழைவாயில் வழியே தான் நுழையப் போகிறோம்!
புதிய வரலாற்றில் நுழைவதற்கு புறப்பட்டு வாருங்கள் தக்பீர் முழங்கி வாருங்கள்!

சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்
சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்
-என்று கூறி வாருங்கள்! நாட்டுக்கு
அதைக் கூற வாருங்கள்.

நன்றி : முஸ்லீம் லீக்.காம்

 

கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் என்ற டி.எம்.அஹ்மத்

sarana-bhaskaran-new-new1

தஞ்சை மாவட்டம் கூத்தாநல்லூரில் 20.04.1923 ல் பிறந்தவர் சாரண பாஸ்கரனார். இறைத் தூதர்களில் ஒருவரான யூசுப் நபியின் வாழ்க்கை வரலாற்றை கருப்பொருளாக வைத்து ’யூசுப் சுலைகா’ என்ற பெருங்காப்பியம் படைத்திருக்கிறார். இவர் மணியோசை, சாபம், சங்கநாதம், நாடும் நாமும், மணிச்சரம், பிரார்த்தனை, சிந்தனைச்செல்வம், இதயக்குரல் என்ற பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். ’ரோஜாத் தோட்டம்’ என்ற நாடகத் தொகுப்பு நூல் ஒன்றும் படைத்திருக்கிறார். இவரது ‘பாலயோகியின் பிரார்த்தனை’ என்ற நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கவிஞர் சாரண பாஸ்கரனார் என்ற பெயருள்ளவர் இந்துவாகத்தான் இருக்க வேண்டும், அவர் எப்படி இஸ்லாமைச் சார்ந்த யூசுப் நபிகள் பற்றி பெருங்காப்பியம் செய்திருக்க முடியும் என்றெண்ணினேன். எனவே வலைத்தளத்தில் தேடியபொழுது, ’உயிர்மை’ என்ற தளத்தில் கழனியூரன் எழுதிய முஸ்லீம் நாட்டாரியல் – தாலாட்டு என்ற கட்டுரையில், கவிஞர் சாரண பாஸ்கரனாரின் பெயரை குறிப்பிடுகையில் அவரது இயற்பெயர் டி.எம்.அஹ்மத் எனத் தெரிய வந்தது. கவிஞர் சாரண பாஸ்கரனார் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய தாலாட்டுப் பாடல்கள் சுவையாக உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்.

தள்ளாடிக் காலூன்றித்
தகிங்கனத்தோம் தாளமிட்டு
சொல்லாட வந்தவனே
சோர்வகற்றத் தூங்கி விழி!

என்ற பாடலில் குழந்தையின் தளர் நடை பற்றிய வர்ணனை மிக அழகாகப் பதிவாகியுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் இவரை ’தமிழோடு நிலைத்திருக்கப் பிறந்தவன்’ என்று பாராட்டியிருக்கிறார். இவர் 63 ஆண்டுகள் வாழ்ந்து 1986 ல் இயற்கை எய்தினார்.

’யூசுப் சுலைகா’ காப்பியம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களின் அரசியல், சமுதாய, பண்பாட்டு வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. மிஸ்ர் நாட்டில் முடியாட்சி இருந்தாலும், அது மக்களைத் துன்புறுத்தும் கொடுங்கோலாட்சியாய் இல்லாமல் மக்கள் மகிழும் வண்ணம் நல்லாட்சியாய் இருந்தது.

மிஸ்ர் மன்னர் உழவர்களுக்கு உதவுவதைத் தன் தலையாய கடமையாக்க் கொண்டுள்ளார். விளைகின்ற தானியத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் வரியாக வசூலிக்கப்பட்டது. உழவர்கள் ஆட்சியாளர்களிடம்,

’எம் நிலத்தை ஒழுங்கு செய்து
உணவுப் பொருள் விளைவிக்க உதவுவீரேல்
ஆனமட்டும் பயிர்விதைத்து விளையுமட்டும்
அடுத்தவர்க்கும் வழங்கிடுவோம்’

என வேண்டி நிற்பதால் அவர்கள் உழவுத் தொழில் புரிந்து கிடைக்கும் பயன்களை மற்றவர்க்கும் வழங்குவோம் என்று ஆர்வமுடன் இருந்தனர்.

மேலேயுள்ள கவிதையை எனக்கு பிடித்திருந்தது. அதனாலேயே இந்தக் கவிதையையும், கவிஞரையும் பற்றி விரிவாக எழுதலாயிற்று. இதை மாதிரியாக வைத்து, ஒப்பில்லா உழவு அல்லது தேவை ஒரு விவசாய புரட்சி என்ற தலைப்புக்கேற்றபடி 16 வரிகளில் யாரேனும் கவிதை படைத்தால் மகிழ்வேன்.

ஆதாரம்:பேராசிரியர்.ச.அபீபுர் ரகுமான் அவர்களின் கட்டுரை – ’செந்தமிழ்ச் செல்வி’ திங்கள் இதழ் மார்ச் 2000

பார்க்க சுட்டி

கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் வாழ்ந்த இல்லம்

தகவல் & புகைப்படம் : சடையன் சாபு

1001

சாரணபாஸ்கரனாரின் திருமண வாழ்த்துப்பா

prof-ismail

(புகைப்படம் தந்து உதவியர் பேராசிரியர் எம்.எம்.ஷாஹூல் ஹமீது அவர்கள்)

ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் முதல்வர் E.P.முஹம்மது இஸ்மாயீல் பழகுவதற்கு மிகவும் இனிமையான  மனிதர்.  மிகச் சிறந்த கல்லூரி   நிர்வாகி. எங்கள் குடும்பத்தில் ஏறக்குறைய அனைத்து பேர்களும் ஜமால் முகம்மது கல்லூரியில் படித்தவர்கள்தான்.

எங்களுக்கு முந்திய தலைமுறையினரில் எனது சிறிய தந்தைமார்கள் ஜமால் முகம்மது கல்லூரியில் படிக்கையில், கல்லூரிக்கு அருகாமையிலிருந்த சேதுராமபிள்ளை காலனியில் தனி வீடு எடுத்து தங்கிப் படித்தனர்.

அதே காலனியில்தான் அப்போது பேரா. முஹம்மது ஈஸா, பெரும்புலவர் பேரா.சி,நயினார் முகம்மது, பேரா.E.P.முஹம்மது இஸ்மாயீல் போன்ற ஜமால் STALWARTS தங்கியிருந்தனர். எனது குடும்ப அங்கத்தினருக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தனர்.

எனது தாய்வழிப் பாட்டனார் அவர்களின் பெயரில் “Hautin Block” கட்டிடத்தை கல்லூரி வளாகத்தில் வணிகத்துறைக்காக நிர்மாணிக்க காரணமாக இருந்தவரும் பேரா.E.P.முஹம்மது இஸ்மாயீல் அவர்கள்தான்.

பேராசிரியரின் குடும்பம் நாகூர் வரும்போதெல்லாம் எங்கள் வீட்டில் தங்குவார்கள். பேராசிரியரின் மனைவியின் உறவினர் மெஹர் பாஷா பஹ்ரைனில்தான் ரொமப காலம் முன்பு இருந்தார்.

பேராசிரியருக்கு மூன்று மகன்கள். டாக்டர் நியாஸ், கலீல், இம்தியாஸ்.

பேராசிரியர் E.P.முஹம்மது இஸ்மாயீல் M.Com அவர்களுக்கு 17.04.1955 வருடம் திருமணம் நிகழ்ந்தது, மணமகள் பெயர் S.A.நூர்ஜஹான் பேகம். இந்த திருமணம் நடந்தேறியபோது மணமகன் முஹம்மது இஸ்மாயீல் ஜமால் முகம்மது கல்லூரியின் வணிகத்துறை தலைமைப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

அவருடைய திருமணத்தின்போது கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் வரைந்த திருமண வாழ்த்துப்பா இது:.

இருமனத்தை ஒருமனமாய் இணைய வைத்து

—இகவாழ்வின் சுகம்யாவும் எய்த வைக்கும்

திருமணத்தை உவந்தேற்று உவகை பூக்கும்

—திருச்செல்வர் முஹமதிசு மாயில் வாழ்வின்

நறுமணத்தை நுகர்ந்திடவே அருந்து ணையாய்

—நற்குணத்தின் பிறப்பிடமாம் நூர்ஜ ஹானைப்

பெருமையுடன் அடைந்திட்ட சிறப்பு என்ணிப்

—பெருந்தகையாம் இறையருளை வணங்கு கின்றேன் !

 

வணிகக்கலை ஆய்ந்துணர்ந்து வல்லோ ராகி

—வந்தவர்க்குக் கற்பிக்கும் நல்லோ ராகி

புனிதக்கலை போதிக்கும் இல்ல றத்தே

—புகழ்நாட்டும் அருங்கலையில் சிறப்பு காணக்

கனிவுநிறை முஹம்மதிசு மாயில் வாழ்வின்

—கலங்கரையாய் நாயகியாய் நூர்ஜ ஹானை

இனிதடைந்த இந்நாளின் சிறப்பை எண்ணி

—எங்கும்நிறை இறையருளை வணங்கு கின்றேன் !

 

சீர்த்திமிகும் குலப்பெருமை செழித்து ஓங்க

—செழுங்குணத்தின் திலகமெனத் திகழ்ந்து, வாழ்வின்

பூர்த்திதரும் இல்லறத்தின் அரரசி யாகும்

—பூவைமணி நூர்ஜஹான் பொலிவுக் கொள்ளக்

கீர்த்திமிகும் முஹம்மதிசு மாயில் அன்பில்

—குன்றாமல் என்றேன்றும் வாழ்வ தற்கு

நேர்த்தியருள் இறையருளை இனிதே வேண்டி

—நெஞ்சார வாழ்த்துகின்றேன் மகிழுகின்றேன் !

 

அன்பினையே அணிகலனாய் அகத்தில் பூண்டு

—அறவாழ்வே இகவாழ்வாய்ச் செயலிற் றாங்கிப்

பண்பினையே பெரும்பொருளாய்த் திரட்டிச் சேர்த்துப்

—பல்லாண்டும் நல்வாழ்வு வாழ்வ தற்கே

ஒன்றுபடும் முஹம்மதிசு மாயில் நெஞ்சம்

—ஒளிபெறவே நூர்ஜஹான் வாழ்வு பொங்க

என்றும் நிறை பெருங்கருணை சொரியும், வல்ல

—ஏகறப்புல் ஆலமீனை இறைஞ்சு கின்றேன் !

 

நாடுயர வீடுயர நலிந்தோர் வாழ்வில்

—நலமுயர வளமுயர உதவுங் கல்வி

தேடுபவர்க் குதவிடவே இதய வாசல்

—திறந்துவிட்ட இசுமாயில் இல்லங் காக்கும்

பீடுபெற்ற நூர்ஜஹான் பேறு பெற்றுப்

—பெருவாழ்வு வாழ்ந்திடவே, இல்லந்தோறும்

தேடரியப் பேரறிவு செழித்து ஓங்கச்

—செய்கின்ற சேவையிலே நிலைத்து வாழ்க !

தாஜ்மகாலும் சாரணபாஸ்கரனாரும்

tt

ttt

தாஜ்மகாலை பாடாத கவிஞன் இருக்கவே முடியாது. யார்தான் அதை பாடவில்லை.?

“இதுதான் காதலுக்காக சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி” என்று மிக  அழகாகச் சொல்லுவார் கவிஞர் வைரமுத்து. , “கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது” என்று அவர் பாடியபோது அவருடைய கற்பனை வளத்தில் நாமும் மூழ்கிப் போகிறோம்.

கவிஞர் சாரண பாஸ்கரனும் தாஜ்மகாலைப் புகழ்ந்து அழகாக கவிதை வடித்திருக்கிறார். தாஜ்மகாலை அவர் காணச் செல்கிறார். தனியாக அல்ல; தன் துணைவியாருடன். அந்த பளிங்கு கட்டிடத்தை நெருங்கியவுடன் அவரது இல்லத்தரசி மகிழ்ந்துப்போய் “நற்கனவு இன்றைக்கே பலித்தது” என்று கணவரிடம் பூரிப்பாய்ச் சொல்கிறார். இவரும் அதை நேரில் கண்டு மூச்சடைத்து, பேச்சடைத்து நிற்கிறார்.

இல்லத்தரசி உயர்ந்து நிற்கும் மினாராவைக் காட்டி ஏதோ சொல்கிறார். பிறகு இருவரும் யமுனை நதிக்கரையின் அழகை அணுஅணுவாய் இரசிக்கிறர்கள்.  நாமும் அவரது அனுபவத்திலும், சொல்லாடலிலும் மூழ்கிப் போகிறோம்.

“கவிஞன் தன்னுடைய அனுபவத்தை கவிதையை சித்தரித்திருக்கிறான். இதிலென்ன பெரிய ஆச்சரியம்?” என்று நீங்கள் என்னைக் கேட்பது நன்றாகப் புரிகிறது,

ஆம். ஆச்சரியம் இருக்கத்தான் செய்கிறது.

முதல் ஆச்சரியம் கவிஞர் சாரண பாஸ்கரன் ஆக்ரா சென்றதும் இல்லை, தாஜ்மகாலைக்  கண்ணால்   கண்டதும் இல்லை.

இரண்டாவது ஆச்சரியம் அவர் இக்கவிதையை 1958-ஆம் ஆண்டு மணிச்சரத்தில் எழுதியபோது அவருக்கு மனைவியே இல்லை.

அதைப்பற்றி பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது அவர் உரைத்த பதில்:

“அந்த மஹல் நிறைவாழ்வு வாழ்ந்தஒரு தம்பதியரின் (மும்தாஜ்-ஷாஜகான்) நினைவுச் சின்னம். அதைக்காணச் செல்வோரும் தம்பதி சமேதராகவே செல்லவேண்டும் என்பதற்காகவே அதை எழுதுவதற்காக ஒரு மனைவியையும் துணைக்கு அழைத்துக் கொள்ள வேண்டிய அவசியமேற்பட்டது.

“தொழில் தர்மம்” “Job Satisfaction” என்றெல்லாம் கூறுகிறார்களே..? அது இதுதானோ..?

(காஷ்மீர்.. பியுட்டிஃபுல் காஷ்மீர்,  காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் என்று பாடிய கவிஞர் வாலி கூட காஷ்மீரை எட்டிப் பார்க்காதவர்தான்)

#அப்துல்கையூம்

இஸ்லாமிய புரட்சிக்கவியின் பாடல்கள்

lks-meeran

தாலாட்டுப் பாடல்

%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81

ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
சீராக கண் வளர்ந்து
சீக்கிரமே தூங்கி விழி!

பாரோர் புகழ்ந்துரைக்கப்
பாட்டியரும் பூட்டியரும்
சீர ஆட்டித் தாலாட்டிச்
சிரிப்பவனே தூங்கி விழி!

ஊரார் உறவினரும்
உற்றவரும் பெற்றவரும்
பாராட்ட வந்துதித்த
பனிமலரே தூங்கிவிழி!

நேராரும் இல்லையென்று
நீள்நிலமே போற்றிடவே
காரார் முகிலெனவே
கவிபொழியத் தூங்கி விழி!

தள்ளாடிக் காலூன்றித்
தகிங்கினத்தோம் தாளமிட்டு
சொல்லாட வந்தவனே
சோர்வகற்ற தூங்கி விழி!

பெற்றவரைப் பிறந்தவரைப்
பெரியவரை வறியவரை
கற்றவரைப் போற்ற வந்த
கண்மனியே தூங்கி விழி!

சோம்பல் துணையகற்றிச்
சூழ் பகையை வெற்றி கொள்ள
ஆம்பல் மலராக
ஆருயிரே தூங்கி விழி!

எல்லார்க்கும் எல்லாமும்
எய்தவைக்கும் நற்பணியில்
நில்லாதுழைக்க வந்த
நித்திலமே தூங்கி விழி!

ஏழைவரில் வாழ்ந்தாலும்
எள்ளுபவர் சூழ்ந்தாலும்
கோழையாக வாழாமல்
குலவிளக்கே தூங்கிவிழி!

போலிகளும் கூலிகளும்
பொதுவாழ்வில புகுதாமல்
வேலியாக காவல் செய்யும்
வீரனாகத் தூங்கி விழி!

ஏமாற்றும் எத்தனாகி
ஏமாறும் பித்தனாகி
பூமிச் சுமையாகாமல்
பொலிவு பெறத் தூங்கிவிழி!

பொய்யுரைத்து பொன்குவித்துப்
புகழ் வரித்து வாழாமல்
மெய்யுரைத்து வையகத்தே
மேன்மை பெறத் தூங்கி விழி!

கவிஞர் சாரணபாஸ்கரனார்

sarana-bhaskaran

கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் எழுதிய நூல்கள்

11 9 7 4

13 12 15 By Abdul Qaiyum

இறுமாந்த கவிஞன்  – கவிஞர் திலகம்!!!

சாரண பாஸ்கரன்

புகைப்படம் தந்து உதவியவர் : ஜனாப் ஜவாத் மரைக்காயர்

முப்பதைந்து நாற்பது வருடங்களுக்கு முன்பு , கூத்தானல்லூரில் ஒரு தெரு (பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது) அடி பைப்பில் தண்ணீர் அடித்து, ஒரு மனிதர் தெருவில் குளித்து கொண்டிருந்தார்.  நான் பார்க்க ஆசைப்பட்ட அந்த மனிதர்தான் அவர் என்று எனக்கு அப்போது தெரியாது. ஆனால் அவரைத் தேடித்தான் அந்தத் தெருவிற்குள் நுழைந்தேன்.

அந்த மகத்தான கவிஞன் பெயரைச் சொல்லித் தெருவில் இருந்த ஒருவரிடம் அவர் இல்லத்தின் அடையாளம் கேட்டேன்.  அந்த மனிதர் அந்தக் குளியல்காரரைச் சுட்டிக் காட்டி அவர்தான் என்றார்.  நான் பிரமித்து விட்டேன்.

என்னுடைய ஒன்பது, பத்து வயதில் சென்னையில் அந்தக் கவிஞரை ஏற்கனவே நான் பார்த்து இருக்கிறேன். எங்கள் தந்தையாரின் தோழர் அவர். அந்த வயதில் இவர் ஒரு மகத்தான கவிஞர் என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

நான் தமிழ்ப் படித்த, அதாவது கவிதை ரசித்த வாலிபப் பருவத்தில் அவரைத் தேடிக் கூத்தானல்லூர் சென்ற போதுதான் அந்தக் கவிஞரைக் குளியல் கோலத்தில் வீதியில் சந்தித்தேன்.

அப்போது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் படித்துக் கொண்டிருந்தேன்.

அந்த மனிதர்தான் கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார்.

கவிஞர் திலகம் அவர்கள் ஓர் இறுமாந்த உணர்வுக்காரர். ஏற்றுக் கொண்ட கருத்தை எவருக்கும் பணியாமல் எங்கேயும் எப்போதும் எடுத்து வைப்பதில் அச்சமற்ற ஆற்றலாளர்.

தாருல் இஸ்லாம் மாத இதழின் ஆசிரியர் தாவூத் ஷா , அஹமதிய்யா இயக்கத்தின் போர்வாள். தமிழ்ப் புலமையில் அவருக்கு நிகராக எவரையும் ஏற்றுக் கொள்ளாதவர். ஆங்கிலத்திலும் நிபுணர். அரபியிலும் வல்லவர். தாருல் இஸ்லாத்தில் ஒரு விளம்பரம் எப்பொழுதும் நிலைத்து இருக்கும்.

அந்த இதழில் ஒரு எழுத்துப் பிழையை யாராவது சுட்டிக் காட்டினால் சன்மானம் உண்டு என்ற விளம்பரம்தான் அது. அனைவருமே கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிப் பிழைகளைத் தேடுவார்கள். எவர் கண்ணிலும் பிழைகள் தென்படவில்லை.

கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார், தாருல் இஸ்லாத்தில் ஒரு எழுத்துப் பிழையைக் கண்டுபிடித்து தாவூத் ஷாவிற்குத் தெரியப் படுத்தினார். விளம்பரத்தில் குறிப்பிட்டபடி சன்மானம் வந்து சேர்ந்தது. அதாவது தாவூத் ஷா சாரண பாஸ்கரனாரிடம் தோற்று விட்டார்.

கவிஞர்கள் மத்தியில் அகம்பாவமும், ஆணவமும் நிறைந்த இறுக்கமான பேர்வழி என்று இவரைப் பற்றி ஒரு கருத்து நிலவிக் கொண்டே இருக்கும்.

கவிஞர் எழுதிய யூசுப் சுலைஹா காவியம். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒப்பற்ற காவியங்களில் இதுவும் ஒன்று. கவிஞரின் இயற்பெயர் அஹமது. கவிஞர் திலகம் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தின் கவிதா மண்டலத்தில் பாரதிதாசன் கொடிக் கட்டிப் பறந்து கொண்டிருந்தார்.

இந்தக் காலத்தில் தமிழில் வெளிவந்த கவிதைத் தொகுப்புகள் அனைத்தும் பாரதிதாசனின் வாழ்த்துக் கவிதையைக் கேட்டு அவர் இல்லத்தில் வரிசையில் நின்ற நிலைமை இருந்தது.

சாரண பாஸ்கரனார் பாரதிதாசனின் சமகால நண்பர்.

கவிஞர் திலகத்தின் யூசுப் சுலைஹா வெளிவரத் தயாராகிக் கொண்டிருந்த காலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் கவிஞர் திலகத்திடம் வலிய வந்து “என்னிடம் வாழ்த்துப்பா வாங்காமல் பெரும்பாலும் கவிதைத் தொகுப்புகள் வெளிவராது. ஆனால் நீங்கள் என்னிடம் யூசுப் சுலைஹா காவியத்திற்கு வாழ்த்துக் கவிதை கேட்கவில்லை. பரவாயில்லை. நானே எழுதித் தருகிறேன்” என்று பாவேந்தர் பாரதிதாசன் கேட்டுக் கொண்டார்.

சாரண பாஸ்கரனாரின் பதில் நேர்மையாக இருந்தது. ஆனால் அந்தத் தொனி முரட்டுத்தனமாக அடாவடித்தனமாக இருந்தது. இதுதான் கவிஞர் திலகத்தின் அணுகுமுறை.

“யூசுப் சுலைஹா திருக்குர்ஆனில் வரும் ஒரு அழகிய சரிதை. இறைத்தூதர் ஒருவரின் வாழ்க்கைப் படிப்பினை, அதனை நான் என் தமிழில் பதிவு செய்து இருக்கிறேன். அதற்கு வாழ்த்துரை வழங்க பாவேந்தர் என்ற அடைமொழிக்கு உரிய உங்களுக்கு அருகதை இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியவில்லை. நீங்கள் எல்லாக் காலங்களிலும் மதுபோதையில் ரசிக்கக் கூடியவர்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் ஒரு நபி வரலாற்றுக் காவியத்திற்கு ஒரு குடி போதைக்காரரிடம் வாழ்த்துரை நான் வாங்க மாட்டேன்” என்று சாரண பாஸ்கரன் , பாவேந்தர் பாரதிதாசனிடம் பதில் சொல்லி வாழ்த்துக் கவிதை தேவை இல்லை என்று சொல்லிவிட்டார்.

கவிஞர் திலகத்தின் கோட்பாடு இப்படித்தான் தெளிவாகவும் இருக்கும், ‘நம்ம பாஷையில்’ சொன்னால் முரட்டுத்தனமாகவும் இருக்கும்.

கவிஞர் திலகம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் ஆழமான பற்றுக் கொண்டவர். நாகைத் தொகுதியில் சட்டமன்ற முஸ்லிம் லீக் வேட்பாளராக 1962 இல் நின்றார். ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஒரு காலகட்டத்தில் முஸ்லிம் லீகிற்குள் கருத்துமுரண் தோன்ற ஆரம்பித்தது. திருச்சி நாவலர் A.M. யூசுப் சாஹிப் தலைமையில் ஒரு பிரிவு முஸ்லிம் லீகை விட்டு வெளியேறியது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் உதயமானது.

அதில் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாளராக இருந்த கீழக்கரை தையன்னா.ஆனா, லெப்பைகுடிக் காடு ஜமாலி சாஹிப் , கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார், முஸ்லிம் லீகின் சென்னை மாநகராட்சி மேயராகவும் அடுத்து துறைமுகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த டாக்டர் ஹபீபுல்லாஹ் பேக், கோட்டாறு செய்குத்தம்பி பாவலரின் பேரன் முழக்கம் மாத இதழின் ஆசிரியர் செய்குத்தம்பி. இன்றைய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் போன்றவர்கள் இருந்தனர்.

ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ் நாடு முஸ்லிம் லீக் கலைக்கப் பட்டு மீண்டும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் நாவலர் யூசுப் சாஹிப் தலைமையில் இணைந்தார்கள். இந்த இணைப்புக் காலத்தில் பிரிந்து போனவர்களில் சிலர் காலமாகி இருந்தனர்.

சென்னை மண்ணடியில் கவிஞர் மூஸா ஒரு மாடி அறையில் தங்கி இருந்தார். அங்கு வந்துதான் பிந்தைய காலங்களில் கவிஞர் திலகம் தங்குவார்.

புஷ்கோட் என்று சொல்லக்கூடிய சட்டை அணிந்திருப்பார். வெள்ளைக் கைலிக் கட்டி இருப்பார். ஒரு கையில் கர்சீப் , மறுகையில் சிகரெட் பாக்கெட் தீப்பெட்டி. கலகலப்பான சிரிப்பு. எவருக்கும் அஞ்சாத நெஞ்சு நிமிர்ந்த நடை. இந்தத் தோற்றம்தான் கவிஞர் திலகத்தை நினைக்கும்பொழுது நெஞ்சில் நிழலாடுகிறது.

கவிஞர் தா. காசிமின் சரவிளக்கு மாத இதழிலில் யூசுப் சுலைஹா ஒரு விமர்சனம் என ஒரு ஆய்வுத் தொடர் எழுபது பகக்ங்களுக்கு மேல் எழுதி அதைக் கவிஞர் தா.காசிமிடம் கொடுத்துவிட்டேன்.

சரவிளக்கு இதழிலில் இது பற்றி விளம்பரம் வந்துவிட்டது.

சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் அலுவலகத்தில் , கவிஞர் காசிம், M.A. அக்பர் அண்ணன், கவிஞர் நாகூர் இஜட். ஜபருல்லா, நான் முதலானோர் அமர்ந்திருந்தோம்.

அப்பொழுது தலைவர் சமது சாஹிப் என்னிடம் சொன்னார்கள்.

“சரவிளக்கில், யூசுப் சுலைஹாவை நீங்கள் விமர்சிப்பதாக விளம்பரம் வந்திருக்கிறது. நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். சாரண பாஸ்கரனார் கொடூரமான முரட்டுக் கவிஞர். அவரை விமர்சித்தால் அவருடைய பதில் உங்களை நிலைக் குலைய செய்துவிடும். தாட்சண்யம் இல்லாமல் தாக்கக் கூடியவர். அவர் தாக்குதலில் நானே பலமுறை தடுமாறி இருக்கிறேன்.”

“நான் அதுபற்றி கவலைப் படவில்லை. எழுதி விட்டேன். கவிஞரிடம் கொடுத்து விட்டேன். கவிஞர் தா.காவும் தயக்கமோ அச்சமோ கொண்டவர் அல்லர். அதை வெளியிட்டு விடுவார்.” என்று பதில் சொல்லிவிட்டேன்.

சரவிளக்கில் தொடர்ந்து சுமார் ஒன்பது மாத காலம் வந்தது.

இடைப்பட்ட காலத்தில் மரைக்காயர் லெப்பை தெரு முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு கவிஞர் திலகம் வந்தார். நான் அங்குதான் தங்கி இருந்தேன்.

“டேய் படுவா, என்னையே விமர்சிக்க ஆரம்பிச்சிட்டியா? தொடர் முடியட்டும் நான் பதில் தருகிறேன்” என்று கூறி என்னைத் தழுவிக் கொண்டார்.

“நான் பார்த்து வளர்ந்த பையன் பேனா புடிச்சிட்ட. சபாஷ்” என்று மேலும் சொன்னார்.

அந்த விமர்சன ஆய்வில் கவிஞர் திலகத்தைப் பல இடங்களில் கடுமையாக விமர்சித்து இருந்தேன். விமர்சனத் தொடர் முடிந்தது. சரவிளக்குக்கு நீண்ட பதில் எழுதி கவிஞர் திலகம் சென்னைக்குக் கொண்டு வந்திருந்தார்.

மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள தலைவர் சமது சாஹிபின் அலுவலகத்தில் அமர்ந்துக் கொண்டு, எனக்கும் கவிஞர் காசிமிற்கும் அங்கு வர அழைப்பு அனுப்பினார். நாங்கள் அங்கு வந்து சேர்ந்தோம்.

சமது சாஹிபிடம் கவிஞர் திலகம் இப்படிச் சொன்னார்.

“சமதுபாய்! நம்ம செல்லப் பிள்ளை எழுதிய இந்த விமர்சனம் என்னைத் திகைக்க வைத்தது. யூசுப் சுலைஹா வெளிவந்து இருபத்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு இந்தப் பிள்ளை அதை விமர்சித்து இருக்கிறான். அந்த விமர்சனத்தில் பல குறைகளைச் சுட்டிக் காட்டி இருக்கிறான். இத்தனை ஆண்டுகளாக நம் அனைவரின் கண்களுக்கும் மறைந்திருந்த சில குறைகளை இறைவன் இவன் மூலம் நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறான். இந்தக் கட்டுரையில் கூறப்பட்ட பல குறைகளுக்கு நான் மறுப்பும் எழுதிக் கொண்டு வந்து இருக்கிறேன்.

சமதுபாய்! எனக்கு ஒரு ஆசை. இந்தப் பிள்ளைக்கு அரண்மனைக்காரர் தெருவில் உள்ள கோகலே மண்டபத்தில் பொற்கிழி கொடுத்து பொன்னாடை போர்த்தி என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆசை. ஆனால் இன்றையப் பொருளாதாரம் எனக்கு இடம் தரவில்லை” என்று கூறி என்னை அணைத்துக் கொண்டு முஸாபா செய்தார்.

கவிஞர் திலகம் எழுதிக் கொண்டு வந்த பதில் கட்டுரை சரவிளக்கில் வெளியானது.

தலைவர் சமது சாஹிப் அப்போது என்னிடம் சொன்னார்கள்.

“தம்பி ! சாரண பாஸ்கரனாரின் தாக்குதலுக்குத் தப்பி உள்ள ஒருவர் எனக்குத் தெரிந்து நீங்கள்தான். நான் உங்கள் விமர்சனத்தையும் படித்தேன். கவிஞர் திலகத்தின் பதிலையும் படித்தேன். இரண்டையுமே ஒரு சிறு நூலாகத் தொகுத்து வெளியிடுங்கள்.” என்றார்கள். ஆனால் இது நடக்கவில்லை.

சென்னைப் புதுக்கல்லூரி பேராசிரியர் ஓ.ஏ.காஜா மைதீன், M.Lit ஆய்விற்கு யூசுப் சுலைஹாவைத் தேர்வு செய்து இருந்தார். அதற்காகச் சரவிளக்கில் வந்த என் விமர்சனத் தொடரை வாங்கிச் சென்றார்.

இன்றுவரை அது என்னிடம் திரும்பவில்லை. மாயவரத்தில் நீடூர் செய்யது சாஹிப் மூலம் , சகோதர சமுதாய பேராசிரியர் ஒருவர்.( அவர் பெயர் நினைவில் இல்லை). யூசுப் சுலைஹாவைத் தம் பட்டத்திற்கு ஆய்வுக்கு எடுத்திருந்தார்.

அந்த ஆய்வேட்டில் என்னுடைய சரவிளக்கு விமர்சனத் தொகுப்பில் இருந்து மேற்கோள்கள் காட்டி இருந்தார்.

என் விமர்சனத்தில் யூசுப் சுலைஹா சாரண பாஸ்கரனாரின் முற்றுப் பெறாத காவியம் என்று கூறி இருந்தேன். அது முற்றுப் பெற வேண்டுமானால் இன்னும் சற்று காவியம் விரிவுப் பெற்றாக வேண்டும் என்று விமர்சித்து இருந்தேன்.

இருபத்தேழு ஆண்டுகளில் பல பதிப்புகளாக வெளிவந்த யூசுப் சுலைஹா மீண்டும் பதிப்பிக்கப் பட்டது. கவிஞர் திலகம் யூசுப் சுலைஹாவை விரிவு படுத்தி இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னால் கவிதைகள் எழுதி முழுமைப் பெற்ற காவியமாக்கி வெளியிட்டார்.

அந்த இறுதி வெளியீட்டின் முன்னுரையில் இந்தச் சின்னவனின் பெயரையும் குறிப்பிட்டு முழுமைப் படுத்த இவனும் காரணமாக இருந்தான் என்று சொல்லி அந்த மகத்தான கவிஞர் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

இறைவனுக்கே புகழ் அனைத்தும்!

ஆக்கம் : ஹிலால் முஸ்தபா

hilal-mustafa

(மதிப்பிற்குரிய ஹிலால் முஸ்தபா அவர்கள் சீரிய சிந்தனையாளரும், தலைசிறந்த பத்திரிக்கையாளரும், திறன்வாய்ந்த எழுத்தாளரும் ஆவார்)

( ***2013 )–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மதிப்பிற்குரிய ஹிலால் முஸ்தபா அவர்கள் எழுதிய   முகநூல் பதிவிலிருந்து .